ஆளுநர் வெறும் ரப்பர் ஸ்டாம்ப் மட்டுமே.. இது அவர் வேலை அல்ல.. ஓய்வுபெற்ற நீதிபதி ஏகே ராஜன் பேச்சு!
திருச்சி : "அரசால் தரப்படும் உரையை பேரவையில் படிப்பது மட்டுமே ஆளுநரின் வேலை. அதில் உள்ளவற்றை நீக்கியோ, சேர்த்தோ படிக்க முடியாது. ஏனெனில், ஆளுநர் என்பவர் வெறும் ரப்பர் ஸ்டாம்ப் மட்டுமே." என ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தெரிவித்துள்ளார்.
ஓய்வுபெற்ற நீதிபதி ஏகே ராஜன், நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆராய தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் ஆவார்.
அரசியலமைப்புச் சட்டமும், ஆளுநரின் அதிகார எல்லைகளும் எனும் தலைப்பில் திருச்சியில் நடந்த கருத்தரங்கில் ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் உரையாற்றினார்.
அப்போது பேசிய ஏ.கே.ராஜன், சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின்போது அவர், அரசால் வழங்கப்பட்ட உரையில் சில பகுதிகளை தவிர்த்ததும், தானே சில பகுதிகளைச் சேர்த்து வாசித்ததும் தவறு எனத் தெரிவித்துள்ளார்.
கிடப்பில் ஃபைல்கள்! இந்த ஆளுநர் மட்டுமல்ல எந்த ஆளுநரும் நமக்கு வேண்டாம்! நீதியரசர் சந்துரு அதிரடி!
தமிழ்நாடு - தமிழகம்
ஜனவரி 4ஆம் தேதி அன்று ஆளுநர் மாளிகையில் காசி தமிழ் சங்கமம் விழாவில் பங்கேற்ற தன்னார்வலர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்வில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆ.என்.ரவி, காசி மற்றும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தொடர்பை குறிக்க, தமிழகம் என்ற வார்த்தையை ஆளுநர் ஆர்.என்.ரவி பயன்படுத்தினார். மேலும், தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வதே சரி என்று பேசினார். இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
சட்டமன்ற சர்ச்சை
அதைத்தொடர்ந்து, 9ஆம் தேதி கூடிய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரையாற்றியபோதும் சர்ச்சை வெடித்தது. தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை முழுமையாக வாசிக்காமல் சில பகுதிகளை தவிர்த்ததும், தானே சில பகுதிகளைச் சேர்த்தும் உரையாற்றினார் ஆளுநர் ரவி. இதற்கு எதிராக சட்டப்பேரவையிலேயே தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஆளுநர் வாசித்த உரை அவைக்குறிப்பில் ஏற்றப்படவில்லை. அரசு தயாரித்த ஆங்கில உரையும், சபாநாயகர் அப்பாவு வாசித்த தமிழ் மொழிபெயர்ப்பும் தான் அவைக்குறிப்பில் ஏற்றப்பட்டது. இந்த நிகழ்வு சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
ஆளுநரின் பணி அல்ல
இந்நிலையில் அரசியலமைப்புச் சட்டமும், ஆளுநரின் அதிகார எல்லைகளும் எனும் தலைப்பில் திருச்சியில் நடந்த கருத்தரங்கில் பேசிய ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன், "அரசியலமைப்புச் சட்டத்தில் தமிழ்நாடு என உள்ளதை, அப்படி சொல்ல மறுப்பதற்கு ஆளுநருக்கு உரிமை இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பேரவையில் இயற்றும் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது தான் ஆளுநரின் பணி. மாறாக, ஒப்புதல் கையெழுத்து போட மாட்டேன் என சொல்வது ஆளுநரின் வேலை அல்ல. அரசு இயற்றும் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல், அப்படியே வைத்துக்கொண்டு இருப்பது சிறுபிள்ளைத் தனமான விளையாட்டு.
ரப்பர் ஸ்டாம்ப்
அரசால் தரப்படும் உரையை பேரவையில் படிப்பது மட்டுமே ஒரு மாநில ஆளுநரின் வேலை. அதில் உள்ளவற்றை நீக்கியோ, தானாகச் சேர்த்தோ படிக்க முடியாது. ஏனெனில், ஆளுநர் என்பவர் வெறும் ரப்பர் ஸ்டாம்ப் மட்டுமே. ஆளுநர் உரை குறித்து முதலமைச்சர் தீர்மானம் கொண்டு வந்தது மிகச் சரியான ஒன்று. அதுதான் அரசியலமைப்பு சட்டமும் கூட" எனத் தெரிவித்தார்.