கமல், வெற்றிமாறன் சொன்னது 100க்கு 100 சரி.. ‘உங்க பருப்பு இங்க வேகாது’ - வரிந்துகட்டி வந்த வீரமணி!
திருச்சி : ராஜ ராஜ சோழன் குறித்து வெற்றிமாறனும், கமல்ஹாசனும் கூறிய கருத்து நூற்றுக்கு நூறு சரியானது என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
'பொன்னியின் செல்வன்' திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து, ராஜ ராஜ சோழன் பற்றிய விவாவதங்கள் மீண்டும் வெடித்துள்ளன. இயக்குநர் வெற்றி மாறன், ராஜ ராஜ சோழனை இந்துவாக அடையாளப்படுத்துகிறார்கள் எனப் பேசியிருந்தார்.
அதுகுறித்துப் பேசிய கமல்ஹாசன், ராஜ ராஜ சோழன் காலத்தில் இந்து மதமே இல்லை எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், திருச்சியில் பேசியுள்ள திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, ராஜ ராஜ சோழன் பற்றிய வெற்றிமாறன், கமல்ஹாசன் ஆகியோரின் கருத்துகளை ஆமோதித்துள்ளார்.

வெற்றிமாறன் பேச்சால் சர்ச்சை
இயக்குநர் வெற்றிமாறன் விசிக தலைவர் திருமாவளவன் மணி விழாவையொட்டி நடந்த நிகழ்வில் பேசும்போது, "சினிமா என்பது வெகுமக்களை மிக எளிமையாக சென்றடையும் கலைவடிவம். கலையை இன்று நாம் சரியாக கையாள வேண்டும். இதனை கையாள தவறினால் வெகு சீக்கிரம் நிறைய அடையாளங்கள் பறிக்கப்படும். தொடர்ந்து நம்மிடம் இருந்து அடையாளங்களைப் பறித்துக் கொண்டு இருக்கிறார்கள். வள்ளுவருக்கு காவி உடை கொடுப்பது, ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவது இப்படி தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது." என்று பேசினார். இதற்கு பாஜகவை சேர்ந்த தலைவர்கள் எச்.ராஜா, வானதி சீனிவாசன், குஷ்பூ உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.

கமல் பேச்சு
நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசனிடம் வெற்றிமாறனின் பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, இந்து மதம் என்கிற பெயர் ராஜராஜசோழன் காலத்தில் இல்லை. சைவம் வைணவம் சமணம் தான் இருந்தது. இந்து என்பது வெள்ளைக்காரன் வைத்த பெயர், எங்களுக்கு மதங்கள் வெவ்வேறு இருந்தது. அதையெல்லாம் எட்டாம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் என்பவர் ஷன்மத ஸ்தாபனம் என கொண்டு வருகிறார். இதெல்லாம் சரித்திரம் எனத் தெரிவித்தார்.

கி.வீரமணி கருத்து
இந்நிலையில், கமல்ஹாசனின் கருத்து நூற்றுக்கு நூறு சரி என திக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தந்தை பெரியாரின் 144 வது பிறந்த நாள் விழா மற்றும் புத்தகங்கள் அறிமுக விழா திருச்சியில் நடைபெற்றது. இதில் தி.க தலைவர் வீரமணி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், முன் இருந்த காலத்தை விட தற்போது பெரியார் அதிகம் தேவைப்படுகிறார். மதவாதம், சாதியவாதம் தலை தூக்கி ஆடுகிறது என்றார்.

கல்வியின் தரம்
மேலும் பேசிய கி.வீரமணி, "அனைவருக்கும் கல்வி என்பதை மறுக்கிறார்கள். புதிய கல்வி கொள்கை என்ற பெயரால் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், வேத பாட சாலையில் படித்தவர்கள் 10, 12வது படித்ததற்கு சமம் என பா.ஜ.க அரசு கூறுகிறது. நேரடியாக அவர்கள் பொறியியல் கல்லூரியில் சேரலாம் எனக் கூறி இருக்கிறார்கள். இது பிற்போக்குத் தனமான கண்டிக்கதக்க நடவடிக்கை. கல்வியின் தரம் தாழ்ந்து விட்டதாக அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் இப்பொழுது தான் கல்வியின் தரம் தாழ்கிறது.

திகவின் கடமை
இது போன்ற செயல்பாடுகளை தடுக்கும் வகையில் தான் திராவிட மாடல் ஆட்சி செயல்பட்டு வருகிறது. அதில் அவர்கள் குற்றம் குறைகளை கூறுகிறார்கள். அவர்களிடமிருந்து இந்த அரசை காக்க வேண்டியது திராவிட இயக்கங்களின் குறிப்பாக தி.க வின் கடமையாக உள்ளது.

பாராட்டுகிறோம்
குழந்தை திருமணம் என்பது கிரிமினல் குற்றம். ஆனால் சிதம்பர தீட்சதர்கள் எந்த சட்டத்திற்கும் கட்டுப்படாமல் குழந்தை திருமணம் செய்து வந்தார்கள். இதை ஏற்கனவே இருந்த அரசு கண்டுகொள்ளவில்லை. தற்போது குழந்தை திருமணம் தொடர்பாக தீட்சிதர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்படுகிறார்கள். இதை பாராட்டுகிறோம். அதே நேரத்தில் இந்த நடவடிக்கை கண் துடைப்பு நடவடிக்கையாக இல்லாமல் தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நாட்டில் உள்ள பெரும்பாலான சாமியார்கள் தேடப்படும் குற்றவாளியாக தான் இருக்கிறார்கள்.

100க்கு 100 சரி
ராஜ ராஜ சோழன் குறித்து வெற்றிமாறனும், கமல்ஹாசனும் கூறிய கருத்து நூற்றுக்கு நூறு சரியான கருத்து. அவர்களின் கருத்தை வைத்து வெறித்தனத்தை பரப்பலாம் என சிலர் முயற்சித்தால் அந்த பருப்பு இங்கு வேகாது. வேதங்களில் கூட இந்து என்கிற வார்த்தை கிடையாது. வெள்ளைக்காரர்கள் வைத்த பெயர் தான் இந்து. அந்த மதத்திற்கு இந்து என்கிற பெயர் இல்லை என நீதிமன்ற தீர்ப்புகளே உள்ளன." எனப் பேசினார்.












Click it and Unblock the Notifications