மதுரை எய்ம்ஸ்..ஜே.பி நட்டா தெளிவா சொல்லியிருக்கிறாரே.. மானத்தை காப்பாத்துங்க..எல்.முருகன்
திருச்சி: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான ஆரம்ப கட்டப்பணிகள் 95 சதவிகிதம் நிறைவடைந்துள்ளதாக பாஜக தலைவர் ஜே.பி நட்டா கூறியதாக அமைச்சர் எல்.முருகன் விளக்கம் அளித்துள்ளார். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு லோன் வாங்குவதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்து போடுவது உள்ளிட்ட 95 சதவிகித பணிகள் நிறைவடைந்துள்ளதாகத்தான் ஜே.பி நட்டா தெரிவித்ததாகவும் எல்.முருகன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என அரசியில் கட்சிகள் கோரிக்கை விடுத்துவந்தன. இதன் பலனாக அதிமுக ஆட்சி காலத்தில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. ஆனால் இந்த திட்டம் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.
கடந்த சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது கூட உதயநிதி ஸ்டாலின் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிட செங்கல் என கூறி பிரச்சாரம் செய்தார். இந்த பிரச்சாரம் தமிழக மக்களிடம் வரவேற்பை பெற்றது.
மதுரை எய்ம்ஸ் செங்கல் கூட இல்லை.. 95% பணி முடிந்ததா? ஜேபி நட்டாவின் பச்சை பொய்- எம்.பிக்கள் காட்டம்
ஜே.பி நட்டா
மதுரைக்கு வந்த ஜே.பி நட்டா, எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மொத்தம் ரூ.1,264 கோடியும், தொற்று நோய் பிரிவுக்கு கூடுதலாக ரூ.134 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.
மோடி திறந்து வைப்பார்
எய்ம்ஸ் மருத்துவமனையில் 750 படுக்கைகள் மற்றும் ஐசியூ வசதியுடன் கூடிய 250 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் மருத்துவ மாணவர்கள் சேர்க்கை இடங்களும் 100ல் இருந்து 250ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் முடிந்ததும், அதை பிரதமர் மோடி திறந்து வைப்பார் என்று தெரிவித்தார்.
கிண்டல்
இந்த பேட்டிக்கு பலரும் கிண்டலடித்திருந்தனர். திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்திருந்தன. இதனையடுத்து மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படவுள்ள இடத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பார்வையிட்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையின் தற்போது எந்த நிலை உள்ளது என கடந்த மாதம் கூட மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் தொலைபேசி மூலம் பேசினேன்.
எய்ம்ஸ் எப்படி இருக்கிறது
விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக் தாகூர் கூட எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் இடத்தை கடந்த வாரம் நேரடியாக வந்து பார்த்தார். ஆனால் ஒரு வேலை கூட நடைபெறவே இல்லை. ஆனால் நேற்றைக்கு தமிழக வந்த பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா 95% எய்ம்ஸ் கட்டுமான பணி முடிவடைந்து விட்டது. விரைவில் பிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனையை தொடங்கி வைக்க இருப்பதாக தெரிவித்திருந்தார். ஒருவேளை புல் புல் பறவையை அனுப்பி உடனடியாக பணியை முடித்து விட்டார்களோ என்ன நினைக்கவைத்தாக கூறினார். எனவே வேலை முடிந்து விட்டதா என்று பார்ப்பதற்காக வந்தோம் ஒரு வேலையும் முடிவடையவில்லை புல் புல் பறவையும் இந்த கட்டிடத்தை கட்டவும் இல்லையென கூறினார்.
முழு பொய்
புல் புல் பறவை போன்ற பொய்யை சொல்வது தான் பாஜகவின் வேலையாக உள்ளது. 1200 கோடியாக ரூபாய்க்கு மதிப்பீடு செய்து இருந்த மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணியானது தற்போது 1900 கோடியாக ரூபாயாக அதிகரித்துள்ளது.இதற்கு ஜெயக்கா ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு நூறு கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்க வேண்டும் ஆனால் இதுவரை மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்படவில்லை. மத்திய அமைச்சர் ஒப்புதல் வழங்காமல் டெண்டர் கோரப்படாமல் 95% பணிகள் முடிவடைந்து விட்டதாகவும் பிரதமர் மோடி நாட்டுக்கு மதுரை எய்ம்ஸ் அர்ப்பணிக்க இருப்பதாக கூறுவதும் முழு பொய் என தெரிவித்தார்.
எல்.முருகன் விளக்கம்
இதனிடையே திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான ஆரம்ப கட்ட பணிகள் 95 சதவிகிதம் நிறைவடைந்திருக்கிறது என்று ஜே.பி நட்டா கூறியதாக விளக்கம் அளித்தார். லோன் வாங்குவதற்காக ஒப்பந்தங்களில் கையெழுத்து போடுவது போன்ற பணிகள் நிறைவடைந்திருக்கின்றன என்றும் கூறினார்.
அரசியல் செய்யலாமா
தேவையில்லாமல் சிலர் வந்து அரசியல் செய்யக்கூடாது. எய்ம்ஸ் மருத்துவமனை 2026ஆம் ஆண்டுதான் முடிக்க வேண்டும். ஜைக்கா நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. 1264 கோடி ரூபாய்க்கு அப்ரூவல் ஆனது. என்ன சொல்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அங்கே போய் போட்டோ போடக்கூடாது தயவு செய்து தமிழ்நாட்டு மானத்தை காப்பாற்ற வேண்டும் என்றும் எல்.முருகன் கூறினார்.