முதல்வர் ஸ்டாலினுக்கு திருச்சியில் மாஸ் வரவேற்பு..ரூ308 கோடிக்கு புதிய திட்டங்கள்..நலத்திட்ட உதவிகள்
திருச்சி: தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று அரசு முறை பயணமாக திருச்சிக்கு வந்துள்ளார். முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. ரூ.655 கோடி மதிப்பிலான 5,639 திட்டப் பணிகளை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின். ரூ.308 கோடி மதிப்பிலான 5,951 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். ரூ.79 கோடி மதிப்பில் 22,716 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தமிழகம் முழுவதும் மீண்டும் சுற்றுப்பயணம் செல்லத் தொடங்கியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். கடந்த ஓரிரு மாதங்களாக முதுகுவலியால் சிரமப்பட்டு வந்த முதல்வர் ஸ்டாலின் மருத்துவர்கள் வழங்கிய அறிவுரையை ஏற்று வெளியூர் நிகழ்ச்சிகளை தவிர்த்து வந்தவர், இப்போது மீண்டும் வெளியூர்களுக்கு சுற்றுப்பயணம் செய்து அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். சமீபத்தில் தென்காசி, மதுரை மாவட்டங்களுக்கு பயணம் செய்து நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தார். இன்றைய தினம் திருச்சிக்கு வந்தார் முதல்வர் ஸ்டாலினுடன் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் வருகை தந்தார்.

காலை 9.45 மணியளவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவிகள், மணிமேகலை விருதுகள், மாநில அளவிலான வங்கியாளர் விருதுகளை வழங்குவதுடன், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்த முதல்வர் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதன்பின்னர் திருச்சி அண்ணா விளையாட்டரங்கம், மணப்பாறை அருகே மொண்டிப்பட்டியில் உள்ள டிஎன்பிஎல் ஆலை, மணிகண்டம் அருகேயுள்ள சன்னாசிப்பட்டி ஆகிய இடங்களில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் 22,716 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இன்று பிற்பகல் 2.45 மணியளவில், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சன்னாசிப்பட்டியில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் ஒரு கோடியே ஒன்றாவது பயனாளிக்கு மருந்து பெட்டகம் வழங்கி, மருத்துவத்துறை கட்டிடங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து, அரசு மருத்துவமனைகளில் நிறுவப்பட்ட மருத்துவ கருவிகளின் சேவைகளை தொடங்கி வைக்கிறார்.
முதல்வரின் திருச்சி வருகை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் நாளை நடைபெறும் அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று ரூ.655 கோடி மதிப்பிலான 5,639 திட்டப் பணிகளை திறந்து வைக்கிறார். ரூ.308 கோடி மதிப்பிலான 5,951 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். ரூ.79 கோடி மதிப்பில் 22,716 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

மேலும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன்களை வழங்கி, மணிமேகலை விருது மற்றும் மாநில அளவிலான வங்கியாளர்களுக்கு விருதுகளை வழங்கி பேச உள்ளார். விழாவில்,இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
அதைத்தொடர்ந்து, மொண்டிப்பட்டி டிஎன்பிஎல் தொழிற்சாலையில் ரூ.1,350 கோடியில் கட்டப்பட்டுள்ள 2-ம் அலகு மற்றும் சிப்காட் தொழிற்பூங்காவைத் திறந்து வைக்கிறார். அதன்பின், அங்கிருந்து புறப்பட்டு பிற்பகல் 3 மணியளவில் மணிகண்டம் அருகே உள்ள சன்னாசிப்பட்டிக்கு வரும் முதல்வர், அங்கு மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் இயன்முறை சிகிச்சை பெற்று வரும் பயனாளி ஒருவரை அவரது இல்லத்துக்குச் சென்று சந்தித்து நலம் விசாரிக்கிறார்.
பின்னர் அதே கிராமத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் ஒரு கோடியாவது பயனாளிக்கு மருந்துப் பெட்டகத்தை வழங்குகிறார். பின்னர் அங்கிருந்து விமானநிலையம் வந்து, சென்னைக்குப் புறப்படுகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அவர் செல்லக்கூடிய வழித்தடங்களில் சிறப்பான வரவேற்பு அளிக்க பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று அமைச்சர் கே.என். நேரு கூறினார்.












Click it and Unblock the Notifications