மர்மமான முறையில் இறந்த 30 மான்கள்... திருச்சியில் போலீசார் விசாரணை!
திருச்சி: திருச்சி அருகே பெல் குடியிருப்பு வளாகத்தில் உள்ள பூங்காவில் 30 மான்கள் மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே பெல் குடியிருப்பு வளாகத்தில் பொழுதுபோக்கு பூங்கா உள்ளது. இங்கு சிறுவர்கள் விளையாடுவதற்கான உபகரணங்கள் உள்ளது. மேலும் 300க்கும் மேற்பட்ட மான்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. கடந்த 3 நாட்களாக இங்கு வளர்க்கப்பட்டு வரும் மான்கள் மர்மமான முறையில் திடீர், திடீரென இறந்து வந்தன. இதுவரை 30 மான்கள் வரை இறந்துள்ளன. ஆனால் அதற்கான காரணம் தெரியவில்லை.

மான்கள் சுருண்டு இறந்த தகவல் அறிந்த திருச்சி வனத்துறை மற்றும் திருவெறும்பூர் கால்நடைத்துறை அதிகாரிகள் அங்கு வந்து மான்களின் உடல்களை மீட்டு உடல் பரிசோதனை செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பருவநிலை மாற்றத்தால் மான்கள் இறந்ததா? அல்லது விஷ பூச்சிகள் கடித்ததால் இறந்ததா? என்று வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விஷச்செடிகளை சாப்பிட்டதால் இறந்ததா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மான்களின் உடலில் அளவுக்கு அதிகமான கொழுப்புகள் சேர்ந்ததால் அவை மூச்சு விட முடியாமல் இறந்ததாகவும் சொல்லப்படுவதால் இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மான்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அதன் பின்னர் மான்களின் இறப்புக்கான காரணம் குறித்து முழு விவரம் தெரியவரும். இதனிடையே பூங்கா பகுதியில் நேரில் விசாரணை நடத்திய வனத்துறை அதிகாரி சுஜாதா, மான்கள் உணவில் விஷம் கலந்திருந்ததா? அல்லது உணவு ஒவ்வாமையால் இறந்தனவா என்ற கோணத்தில் உண்மையை கண்டறிந்து வருவதாக தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications