கிளம்பிய எதிர்ப்பு! பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு கட்டண உயர்வு வாபஸ்.. பழைய கட்டணமே தொடரும்
திருச்சி : பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டு நிலையில் அந்த உத்தரவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணத்துக்கு பதிலாக பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 147 இணைப்புக் கல்லூரிகளில் பயிலும் ஏழை எளிய மாணவ, மாணவியரின் தேர்வுக் கட்டணம் உள்ளிட்ட பெரும்பாலான கட்டணங்கள் இரண்டு மடங்கு, மூன்று மடங்கு உயர்ந்துள்ளதாகவும், சில இனங்களுக்கு பொருட்கள் மற்றும் சேவை வரி விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளுக்கு தேர்வு கட்டணமானது 75 ரூபாயிலிருந்து 125 ரூபாயாக உயர்த்தப்பட்டு இருந்தது. இதற்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது.
இதனைக் கண்டித்து தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவியர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேபோன்று திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் மன்னை ராஜகோபால சுவாமி அரசினர் கலைக் கல்லூரியில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் கல்லூரி வளாகத்தில் கண்டன முழக்கங்கள் எழுப்பி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பழைய தேர்வு கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்திதனர். இந்நிலையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று தேர்வு கட்டண உயர்வை தற்காலிகமாக பாரதிதாசன் பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்துள்ளது. உயர்த்தப்பட்ட தேர்வுக் கட்டணத்திற்கு பதிலாக பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என பாரதிதாசன் பல்கலைக்கழக துணை வேந்தர் செல்வம் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications