லால்குடியில் களமிறங்கும் ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவை பரிசு மழையில் நனைய வைத்த லீமா ரோஸ்!
சென்னை: அதிமுக சார்பாக திருச்சி லால்குடி சட்டசபைத் தொகுதியில் ஆதவ் அர்ஜுனாவின் மாமியார் லீமா ரோஸ் மார்ட்டின் போட்டியிட உள்ளதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். சில வாரங்களுக்கு முன்பாக அதிமுகவில் இணைந்த அவர் லால்குடி தொகுதி மக்களுக்கு ஏராளமான பரிசுப் பொருட்களையும், அதிமுக நிர்வாகிகளை பரிசு மழையில் நனைய வைத்திருப்பதாகவும் அக்கட்சியினர் கூறுகின்றனர்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 35 நாட்கள் மட்டுமே இருக்கும் சூழலில், அத்தனை கட்சிகளும் கிட்டத்தட்ட வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்ய தொடங்கிவிட்டது. சில தொகுதிகளில் வேட்பாளர்களுக்கு அக்கட்சித் தலைமை உறுதி கொடுத்துவிட்டதையடுத்து, அவர்கள் பணிகளை மேற்கொள்ள தொடங்கிவிட்டனர். அந்த வகையில் சில வாரங்களுக்கு முன் ஐஜேகேவில் இருந்து விலகி, லீமா ரோஸ் மார்ட்டின் அதிமுகவில் இணைந்தார்.

எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து லீமா ரோஸ் மார்ட்டின் தன்னை அதிமுகவில் இணைத்து கொண்டார். லாட்டரி மார்ட்டின் மனைவியும், தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவின் மாமியாரான லீமா ரோஸ் மார்ட்டின் திடீரென அதிமுகவில் இணைந்தது பேசுபொருளாகியது. இதனிடையே அவர் அதிமுக பக்கம் வந்ததால், தேர்தலில் போட்டியிடுவாரா என்ற கேள்வியும் எழுந்தது.
அதற்கேற்ப அதிமுகவில் இணைந்த கையோடு திருச்சி லால்குடி தொகுதியில் தேர்தல் பணிகளை தொடங்கி தீவிரமாக மேற்கொண்டிருக்கிறார். முதற்கட்டமாக லால்குடி தொகுதியின் அதிமுக நிர்வாகிகளை பரிசுப் பொருட்களை மழை போல் கொடுத்து நனைய வைத்திருக்கிறார். அதேபோல் லால்குடி தொகுதி வாக்காளர்களுக்கும் பரிசுப் பொருட்களை வாரி இரைத்திருக்கிறார்.
தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே இந்த பணிகளை லீமா ரோஸ் மார்ட்டின் செய்து முடித்திருக்கிறார். 2006 முதலே லால்குடி தொகுதி திமுக வசம் இருந்து வருகிறது. அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஷ் ஆகிய இரு பவர் சென்டர்கள் இருக்கும் போதும், லால்குடி தொகுதியில் லீமா ரோஸ் மார்ட்டின் நம்பிக்கையுடன் பணிகளை மேற்கொள்வதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.
லால்குடி தொகுதியில் உள்ள சுமார் 40% வாக்காளர்கள் உடையார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தான். லீமா ரோஸ் மார்ட்டினும் உடையார் சமூக மகளிர் அணி தலைவியாக பல்வேறு பணிகளை செய்திருக்கிறார். அதேபோல் கிறிஸ்தவர் என்பதால் சிறுபான்மை சமூக வாக்குகளையும் பெற முடியும் என்று அதிமுக நம்புகிறது.
ஒருவேளை அதிமுக நிர்வாகிகளும் லீமா ரோஸ் மார்ட்டினுக்கு ஆதரவாக தீவிரமாக பணியாற்றும் பட்சத்தில், 20 ஆண்டுகளுக்கு பின் லால்குடி தொகுதியை அதிமுக கைப்பற்ற முடியும் என்று பார்க்கப்படுகிறது. லால்குடி தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட பலரும் முனைப்பு காட்டினாலும், தலைமையுடன் லீமா ரோஸ் மார்ட்டினுக்கு இருக்கும் தொடர்பு காரணமாக அவருக்கு சீட் உறுதி என்று கட்சியினரே பேச தொடங்கிவிட்டனர்.












Click it and Unblock the Notifications