பரட்டை தலை.. அழுக்கு துணியுடன் சுற்றினால்.. பின்னாடியே கத்திரிக்கோலுடன் போகும் ரங்கேஸ்வரன்.. சபாஷ்!
ஆதரவற்றோருக்கு போலீஸ்காரர் ரங்கேஸ்வரன் உதவி வருகிறார்
திருச்சி: "அடையாளம் தெரிய வேணாமாங்க.. அதான் அழுக்கு உடை.. பரட்டை தலை.. என கண்ணில் யார் பட்டாலும் அவங்க பின்னாடியே கையில் கத்தரிகோலுடன் போய்விடுகிறேன்" என்கிறார் போலீஸ்காரர் ரங்கேஸ்வரன்! நடுரோட்டிலேயே ஆதரவற்றவர்களை உட்கார வைத்து அவர்களுக்கு கட்டிங், ஷேவிங், சாப்பாடு தந்து கலக்குகிறார் மனுஷன்!
திருச்சி மெயின் பஸ் ஸ்டாண்ட், ஜங்ஷன் ரெயில்வே ஸ்டேஷன்களில் சில காலமாகவே ஆதரவற்றோர் சுற்றி வருகின்றனர்.. இவர்கள் யார், பின்புலம் என்ன என்று தெரியவில்லை.

அழுக்கு உடை.. பரட்டை தலையுடன் ரோட்டோரத்தில் இவர்கள் சுற்றி வருகின்றனர்.. சாப்பாடு இல்லாமல் அப்படியே பசியுடன் படுத்து கிடக்கின்றனர்.. இவர்களுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளார் போலீஸ்காரர் ரங்கேஸ்வரன்.. 25 வயசுதான் ஆகிறது.. தமிழ்நாடு சிறப்புகாவல்படை முதலணி, திருச்சியில் வேலை பார்த்து வருகிறார்..
ரோட்டில் சுற்றி திரிபவர்களை அழைத்து, அவர்களுக்கு முடி வெட்டி விடுகிறார்.. புது டிரஸ் வாங்கி தருகிறார்... வயிறு நிறைய சாப்பாடு போடுகிறார்.. அது மட்டுமில்லை.. ஆதரவற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை தேடிச் சென்று அவர்களுக்கும் கட்டிங், ஷேவிங் செய்து விடுகிறார்.. திருச்சியில் இதுவரை 20-க்கும் மேற்பட்டோருக்கு இப்படி உதவி செய்து வருகிறார் ரங்கேஸ்வரன்.
டியூட்டி டைம் தவிர மற்ற நேரம் முழுவதும் இவருக்கு இதுதான் வேலையாம்.. இவரது சொந்த ஊர் தேனி மாவட்டம் கம்பம் சுருளிப்பட்டி.. அப்பா விவசாயம் செய்கிறார்.. இந்த சேவை பற்றி ரங்கேஸ்வரன் சொல்லும்போது, "நான் என்ஜினியருக்கு படிச்சிருக்கேன்.. 2017-ம் ஆண்டு போலீஸ் வேலையில் சேர்ந்தேன்.. இங்க வந்தபோதுதான் இப்படிப்பட்டவர்களை சாலையில் பார்த்தேன்.
ஏதோ ஒரு சூழ்நிலையில் குடும்பத்தை விட்டு பிரிந்து வந்து இப்படி ரோடுகளில் சுற்றி திரிகிறார்கள். நான் இப்படி இவர்களுக்கு கட்டிங், ஷேவிங் செய்துவிட காரணம் என்ன தெரியுமா? ஒருவேளை இவர்களை குடும்பத்தினர் தேடி வரும்போது, தாடி, பரட்டை, அழுக்கு துணியுடன் இருந்தால் தோற்றம் அடையாளம் தெரியாமல் போய்விடும்.. அதனால்தான், கட்டிங் செய்துவிட்டு, வேறு ஆடைகளை உடுத்தி என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன்" என்றார்.
கால சக்கரம் வேகமாக சுழல.. மனித எந்திரம் அதற்கு மேல் சுழல.. ஆதரவற்றவர்களின் பின்னால் ஓடிச்சென்று உதவும் இந்த குணம் எத்தனை பேருக்கு வரும்? காக்கி சட்டைகளுக்குள் இருந்த ஈரம் பீறிட்டு வெளிவர ஆரம்பித்துவிட்டது!












Click it and Unblock the Notifications