தைல காட்டுக்குள் வெடித்த துப்பாக்கி..புரியும் மொழியில் பேசிய போலீஸ்! ரவுடி துரை என்கவுண்டர் பின்னணி!
திருச்சி: திருச்சியைச் சேர்ந்த பிரபல ரவுடியான துரை என்கிற துரைசாமி புதுக்கோட்டை அருகே போலீஸ் நடத்திய என்கவுண்டரில் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகள் இடையே பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. 65க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய ரவுடி துரைசாமி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட காரணம் என்ன? அவர் மீதான குற்றச்சாட்டுகள் என்னென்ன? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்..
திருச்சி வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த துரை என்கிற துரை சாமி அப்பகுதியில் பெரும் ரவுடியாக வலம் வந்திருக்கிறார். திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் அவர் மீது கொலை, கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து, மிரட்டி பணம் பறிப்பது உள்ளிட்ட 65க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லையில் வெட்டி கொலை செய்யப்பட்ட பசுபதி பாண்டியன் ஆதரவாளரான தீபக் ராஜா படுகொலையில் கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும் துரைசாமி மீது சந்தேகிக்கப்படுகிறது.
இந்த நிலையில் திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருக்கும் வியாபாரிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலரை தனது ஆட்களின் மூலம் மிரட்டி ரவுடி துரைசாமி பணம் பரித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து காவல்துறையினர் நீண்ட நாட்களாக துரை சாமியை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். துரைசாமியை பிடிக்க இரு மாவட்ட போலீசாரும் தீவிர சோதனை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் அருகே இருக்கும் தைல மர காட்டுப் பகுதியில் துரைசாமி மறைந்து இருப்பது தெரியவந்தது. இதை அடுத்து ஆலங்குடி காவல் ஆய்வாளர் முத்தையன் மற்றும் உதவி ஆய்வாளர் மகாலிங்கம் உள்ளிட்ட போலீசார் தைல மர காட்டுப் பகுதிக்கு சென்று ரவுடி துரை சாமியை தேடி வந்தனர். அப்போது அங்கு ரவுடி துரை தனது கூட்டாளிகளுடன் மது அருந்திக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அவரை பிடிக்க முயன்றபோது ஆய்வாளர் முத்தையனை துரை தான் வைத்திருந்த கத்தியால் கையில் தாக்கியுள்ளார். இதனையடுத்து முத்தையன், தான் வைத்திருந்த கைத் துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி சுட்டதாகவும், ஆனாலும் துரை மீண்டும் அவரை தாக்கம் முயன்றதால் அவரது கால் மற்றும் நெஞ்சில் இரண்டு ரவுண்டு சுட்டுள்ளார். இதில் ரவுடி துரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதை அடுத்து அவரது உடல் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. துரை தாக்கியதில் காயமடைந்த ஆய்வாளர்கள் மகாலிங்கம் மற்றும் முத்தையன் ஆகிய இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் புதுக்கோட்டையையே இந்த சம்பவம் உலுக்கி இருக்கிறது. இதனை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் குவிந்து வருவதால் பரபரப்பு நிலவுகிறது.
இந்த நிலையில் கட்டப்பஞ்சாயத்து, கொலை, ஆள் கடத்தல் என ஒரு மிகப்பெரிய நெட்வொர்க்கை துரை நடத்தி வந்ததாகவும், அரசியல் புள்ளிகள், தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் தன்னை எதிர்ப்பவர்களை கூலிப்படையினரை வைத்து கொலை செய்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே திருச்சியில் பிரபல ரவுடியான கொம்பன் ஜெகன் சுட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் அவர் மீதும் ஆள் கடத்தல், பணம் பறித்தல் குற்றச்சாட்டுகள் இருந்தது. இந்த நிலையில் தற்போது துரை சாமியும் அதே பாணியில் செயல்பட்டு வந்ததால் என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்கின்றனர் காவல்துறையினர். மேலும் தமிழகம் முழுவதும் இதே போல அட்டகாசம் செய்து வரும் ரவுடிகளை ஒடுக்க, அவர்களுக்கு புரியும் மொழியில்' நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications