பார்வை பறிபோனதால் கலங்கிய மாணவி..மீண்டும் பார்வை கிடைக்க உதவிய அனிதா ராதாகிருஷ்ணன்! எப்படி தெரியுமா?
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி மாரியம்மன் கோயில் வடக்குத் தெருவை சேர்ந்தவர் சரவணன். . இவரது மகள் சரோஜா(16). இவர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி சரோஜாவுக்கு திடீரென கண் பார்வை பறிபோனது.
இந்த சிறு வயதில் மகளுக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டதால் அவரது பெற்றோர்கள் மிகுந்த வேதனை அடைந்தனர். மேலும், இவர்களது குடும்பம் ஏற்கனவே வறுமையில் வாடியதால் என்ன செய்வது என தெரியாமல் திகைத்து நின்றனர்.

அமைச்சர் அனிதா.ஆர்.ராதாகிருஷ்ணன்
இது குறித்த தகவல் தமிழ்நாடு மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா.ஆர்.ராதாகிருஷ்ணனுக்கு தெரியவந்தது. மாணவிக்கு உதவி புரிய வேண்டும் என்று நினைத்த அவர் உடனடியாக மாணவியை தொடர்புகொண்டு கூடுதல் விபரம் அறிந்தார். இதனை தொடர்ந்து சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் மாணவி சரோஜாவுக்கு சிகிச்சை அளிப்பதற்கு ஏற்பாடு செய்தார்.

மீண்டும் பார்வை கிடைத்தது
இதன்பின்னர் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. உரிய நேரத்தில் அளிக்கப்பட்ட சிகிச்சை காரணமாக, மாணவி சரோஜாவுக்கு மீண்டும் பார்வை கிடைத்தது. மேலும் அமைச்சர் அனிதா.ஆர்.ராதாகிருஷ்ணன் தனது உதவியாளர்கள் மூலம் மாணவிக்கு நிதி உதவியும் அளித்தார். அவரது நேர்முக உதவியாளர் கிருபாகரன், கண்ணன் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று அமைச்சர் கொடுத்தனுப்பிய ரூ.10 ஆயிரத்தை மாணவி குடும்பத்திடம் வழங்கினார்கள்.

மாணவி சொல்வது என்ன?
இது குறித்து மாணவி சரோஜா நெகிழ்ச்சியுடன் கூறுகையில, 'திடீரென பார்வை பறிபோனதால், கல்வியை தொடர முடியுமா? என்று பயத்தில் மூழ்கினேன். ஆனால் அமைச்சரின் முயற்சியால் எனக்கு பார்வை கிடைத்தது பெரும் நிம்மதியாக இருக்கிறது. அனிதா.ஆர்.ராதாகிருஷ்ணனுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை' என்றார்.

மக்கள் பாராட்டு
''என் மகளின் எதிர்காலம் என்னாகுமோ என்ற கலக்கத்தில் இருந்தேன். ஆனால் அமைச்சர் அனிதா.ஆர்.ராதாகிருஷ்ணனால் அவளுக்கு எதிர்காலம் கிடைத்திருக்கிறது" என்று மாணவியின் தந்தை சரவணன் கூறினார். உரிய நேரத்தில் மாணவிக்கு பார்வை கிடைக்க உதவி செய்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ஆறுமுகநேரி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications