தூத்துக்குடியில் பரபரப்பு.. திடீரென கடற்கரையோரம் தரைதட்டிய சரக்கு கப்பல்.. என்ன நடந்தது?
தூத்துக்குடி: தூத்துக்குடி கடல் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக பழைய துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த சிறிய கப்பல் இழுத்து வரப்பட்டு கடற்கரையோரம் தரைதட்டி நிற்கிறது.
Recommended Video
தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவு கொழும்பு உள்ளிட்ட சில நாடுகளுக்கு சரக்குகளை கொண்டு செல்வதற்காக பார்ச் எனப்படும் சிறிய வகை கப்பல் இயக்கப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான டன் எடையுள்ள இந்த கப்பல் தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு சரக்குகளை ஏற்றிச்செல்லும்.

சரக்குகளை ஏற்றுவதற்காக பழைய துறைமுகத்தில் இடம் இல்லாத காரணத்தினால் சில நேரங்களில் நங்கூர பகுதியில் நிறுத்தப்படும். இதேபோல் ''முத்தா எமரால்ட்" என்ற பார்ச் கப்பல் பழைய துறைமுகத்தில் இடம் இல்லாததால் பழைய துறைமுகத்தின் வெளிப்பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று காலை இந்த கப்பல் திடீரென காற்றின் வேகம் காரணமாகவும், கடலில் ஏற்பட்ட சீற்றம் காரணமாகவும் நங்கூரமிட்டு இருந்த பகுதியில் இருந்து இழுத்து வரப்பட்டது. சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இனிகோ நகர் கடல் பகுதியில் குடியிருப்புகளை நோக்கி அந்த கப்பல் நகர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை கண்ட அப்பகுதி மீனவர்கள் உடனடியாக அங்கிருந்த தங்களது பைபர் படகுகளை கடலுக்குள் கொண்டு சென்று பாதுகாத்தனர். கரை தட்டி நிற்கும் அந்த கப்பலை அந்த பகுதி பொதுமக்கள், சிறுவர்கள், சிறுமிகள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். பார்ச் கப்பலை மீண்டும் பழைய துறைமுகத்திற்கு கொண்டு செல்லும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications