தூத்துக்குடி எஸ்பி ஆபிஸ்க்கு திடீரென வந்தது மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியா?அதிர்ந்த போலீஸ்.. ட்விஸ்ட்
தூத்துக்குடி: மும்பை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருப்பதாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்தவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். ஐகோர்ட்டு நீதிபதி என கூறி ஏமாற்றியதாக சென்னையைச் சேர்ந்த ஆடிட்டர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு கடந்த மே 21ம் தேதி ஒருவர் காரில் வந்தார். காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்த வரவேற்பாளர் பணியில் இருந்த ஆயுதப்படை பெண் காவலரிடம் மாரியம்மாளிடம் அந்த நபர் தான் மும்பை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருப்பதாகவும், காவல் கண்காணிப்பாளரை பார்க்க வேண்டும் என்று கூறினார்.

மாரியம்மாள், அவருக்கு வழக்கம் போல் விசிட்டர் சிலிப் கொடுத்திருக்கிறார். அதில், அவரது பெயர் பாஸ்கர் என்றும் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி என்று எழுதி கொடுத்திருக்கிறார். அப்போது, சந்தேகம் அடைந்த மாரியம்மாள், அவரிடம் அடையாள அட்டையை கேட்டிருக்கிறார். அதற்கு பாஸ்கர் முன்னுக்கு பின் முரணாக பேசியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு, காவலர் மாரியம்மாள் தகவல் தெரிவித்தார். இதை தொடர்ந்து சிப்காட் போலீசார் விரைந்து வந்து அவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் போலீசாரை அதிர வைக்கும் வகையில் தகவல்கள் வெளியானது. அவர் சென்னை கொட்டிவாக்கம் கற்பகம்பாள் நகரைச் சேர்ந்த 57 வயதாகும் பாஸ்கர் என்பதும் அவர் நீதிபதி இல்லை, சென்னையில் ஆடிட்டராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.
ஆடிட்டர் பாஸ்கர், கோவையை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரிடம், தான் நீதிபதியாக இருப்பதாக அறிமுகமாகி இருக்கிறார் இதனை தொடர்ந்து உடன்குடியில் உள்ள ராமச்சந்திரன் வீட்டுக்கு பாஸ்கர் சென்றுள்ளார். அப்போது ஏற்பட்ட ஒரு பிரச்சினை தொடர்பாக மெஞ்ஞானபுரம் போலீஸ் நிலையத்துக்கு சென்று, தான் நீதிபதி என்று கூறி வழக்கில் தனக்கு சாதகமாக நடக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்
ஆனால் அங்கு பணியில் இருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், நியாயமாக விசாரணை நடத்துவோம் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது புகார் தெரிவிப்பதற்காக தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்துக்கு வந்து, நீதிபதி என கூறி ஏமாற்றியதாக விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் பாஸ்கர் மீது, பொது ஊழியர் போன்று ஆள்மாறாட்டம் செய்து, பொது ஊழியரின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்ததுடன் அவரை கைது செய்தனர். பின்னர் ஆடிட்டர் பாஸ்கர் பயன்படுத்திய காரை போலீசார் பறிமுதல் செய்து, தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications