ஓட்டு வீடு; ஓடும் ஆறு.. நினைவில் மூழ்கிய மாரி செல்வராஜ்! இவரின் பூர்வீக வீடா இது?
தூத்துக்குடி: தனது சொந்த கிராமம் பற்றியும் தனது பூர்வீக வீடு பற்றியும் பல நினைவுகளை இயக்குநர் மாரி செல்வராஜ் பகிர்ந்துகொண்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கருங்குளம் அருகே இருக்கும் புளியங்குளம் என்ற சின்ன கிராமம்தான் இயக்குநர் மாரி செல்வராஜின் ஊர். கொரோனா ஊரடங்கின் போதுகூட அவர் தனது கிராம மக்களுக்கு உதவிகளைச் செய்வதற்காக அங்கே சென்றார். இப்போது 'வாழை’ படம் வெளியாகியுள்ள தருணத்தில் அவர், தனது பூர்வீக வீட்டைப் பற்றிய நினைவுகளை ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

“நான் படிக்கும் காலத்தில் இந்தளவுக்கு சிமெண்ட் சுவர்கள் இல்லை. வீட்டிற்கு ஓடு மட்டும் போட்டிருந்தது. 'பரியேறும் பெருமாள்’ வெளியான பிறகுதான் மாற்றிக் கட்டினோம். அதன் பிறகுதான் வீட்டுக்குள்ளாகவே கழிப்பறை வசதி வந்தது” என்கிறார் மாரி செல்வராஜ். தொடர்ந்து பல நினைவுகளை அசைபோட்ட அவர், “என் சின்ன வயதில் ஓலை வீடுகள் அதிகமாக இருந்தன. ஓடு போட்ட வீட்டை வசதியான வீடு என ஊரில் சொல்வார்கள். அந்தக் காலத்தில் ஓலை வீடுகள்தான் அதிகம் இருந்தன. அரசு தொகுப்பு வீடுகளைக் கட்டிக் கொடுக்கும் திட்டம் கொண்டுவந்த பிறகுதான் காலனியில் உள்ள வீடுகளில் மாற்றம் உண்டானது.
ஓலை வீட்டிலிருந்தபோது அதிலிருந்து ஓட்டு வீட்டுக்குப் போகவேண்டும் என ஆசை வந்தது. பின் ஓட்டு வீட்டிலிருந்து கான்கிரீட் வீட்டிற்குப் போகவேண்டும் என்று ஆசை வந்தது. இப்போது கான்கிரீட் வீட்டில் வசிக்கிறேன். இந்தக் கிராம வீட்டிற்கு நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போதுதான் மின்சாரம் வந்தது. அப்போதுதான் ஃபேன் வாங்கினோம். அதற்கான தவணையை 6 மாதம் கட்டினோம். 12 ஆம் வகுப்பு படிக்கும் போதுதான் டிவி வந்தது. என் அண்ணனுக்கு 2003 ஆசிரியர் வேலை கிடைத்தது. அந்த வருமானத்திற்கு பிறகு லேசாக வீட்டை மாற்றிக் கட்டினோம்.
என் அண்ணன் வேலைக்குப் போய் கட்டிய வீடு என்பதால் நான் இதை இடித்துக் கட்டாமல் அப்படியே வைத்துள்ளேன். அவர் பார்த்துப் பார்த்துக் கட்டியது. இன்றைக்குப் பணம் வந்துவிட்டது என்பதால் நான் உடனே இடித்துக் கட்டிவிட முடியாது. அண்ணனின் உணர்வுகள் இதற்குள்ளே இருக்கிறது. என் இளம் வயதில் முதலில் 3 ஆடுகள் வாங்கி வளர்த்தோம். நாளாக நாளாக அவை 60 ஆடுகளாகின. மாடுகள் 10 இருந்தன. அவற்றை எல்லாம் நான் தான் மேய்ப்பேன். அம்மா பன்றிக்குட்டி கூட வளர்த்தார். அதுவே எனக்குப் பிடித்த விலங்கு. பலரும் அதை வெறுப்பாகப் பார்த்தனர். அண்ணன் பிஎட் படிக்கப் போகும் போது பணம் தேவை வந்தது. அதற்காக 60 ஆடுகளை அம்மா விற்றார். அவற்றை வண்டியில் வந்து வியாபாரி ஏற்றிக் கொண்டு போகும்போது மனம் தாங்க முடியவில்லை.
பாசத்திற்காக இவற்றை வளர்க்கவில்லை. வீட்டில் ஏதாவது பணக் கஷ்டம் விற்கலாம் என்பதற்காகத்தான் வளர்த்தோம். ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது இவற்றை எல்லாம் விற்றால் பரவாயில்லையே எனத் தோன்றியது. ஆனால், 60 ஆடுகளையும் வேன் வந்து ஏற்றிப் போன நாள் வீடு பயங்கர துக்கத்தில் மூழ்கியது. அப்போதுதான் அதன் வலி புரிந்தது. ஆடு, மாடுகளைப் போலவே அம்மா நாய்களையும் வளர்த்தார். அதுதான் அம்மா வயலுக்குப் போகும் போது துணையாகப் போகும்” என்று சொல்லும் மாரி செல்வராஜ் குடும்பம் இந்த வீட்டில் இல்லை, தம்பி அரசு அதிகாரியாக இருக்கிறார். அண்ணன் அரசுப் பள்ளி ஆசிரியராக இருக்கிறார். அக்காவும் ஊரில் இல்லை. அக்காவுடன் தான் அம்மா இருக்கிறார். ஆகவே இந்த விட்டை அப்படியே பூட்டி வைத்துள்ளனர்.
இருந்தாலும் வீட்டில் ஏசி, ஃபிரிட்ஜ் எனப் பல பொருட்கள் அப்படியே உள்ளன. கொரோனா ஊரடங்கின் போது ஒட்டுமொத்த குடும்பமும் இந்த வீட்டிற்கு வந்துவிட்டன. தான் பொருளாதார ரீதியாக உயர்ந்து இருந்ததால் ஊர் மக்களுக்கும் மாரி உதவி செய்திருக்கிறார். இந்த ஊரில் இருக்கும் போது தான் ஒரு தைரியமான ஆளாக இருந்ததாகச் சொல்லும் மாரி தனக்குள் இன்னும் பல வலிகள் உள்ளன என்றும் சொல்லி இருக்கிறார். சென்னையைப் பொறுத்தவரை வீடு மட்டும்தான் தனக்கான இடமாக உள்ளது என்றும் ஊரில் அப்படி இல்லை, ஏரி, ஆறு, வயல் எனப் பல இடங்கள் மனதிற்கு இருந்தன என்றும் பேசி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் தான் ஒரு வலி நிறைந்த மனிதன் என்றும் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications