மகளை வளர்க்க மாறுவேடம்! 30 ஆண்டுகளாக ஆணாக மாறிய பெண்!தூத்துக்குடியில் நெஞ்சை உருக்கும் உண்மை சம்பவம்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் திருமணம் முடிந்த 15 நாளில் கணவரை இழந்த நிலையில் மகளை வளர்க்க 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆணாக மாறி தவவாழ்வு வாழும் நெஞ்சை உருக வைக்கும் சம்பவம் நடந்துள்ளது.
Recommended Video
தற்போதைய காலக்கட்டத்தில் பணம்பறிக்கும் நோக்கில் சமூக வலைதளங்களில் ஆண்கள் பெண்கள் போல் நடித்து மோசடியில் ஈடுபடுகிறார்கள் என்பதை நாம் அடிக்கடி கேள்வி பட்டு இருக்கிறோம்.
ஆனால் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண் தனது மகளை வளர்க்க ஆணாக மாறி யாருக்கும் சந்தேகம் வராதபடி 30 ஆண்டுகளுக்கும் மேலாக தவவாழ்க்கை வாழ்ந்துள்ள சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:
நிலக்கரி தட்டுப்பாடு...தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 4 யூனிட்களில் மின் உற்பத்தி நிறுத்தம்
15 நாளில் கணவர் மறைவு
தூத்துக்குடி மாவட்டம் எப்போதும் வென்றான் அருகே உள்ள காட்டுநாயக்கன்பட்டி கிராமத்தில் வசிப்பவர் பேச்சியம்மாள் (வயது 57). இவருக்கு 20 வயது நிரம்பிய நிலையில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த 15 நாளில் மாரடைப்பால் அவரது கணவர் இறந்தார். இதனால் இளம்வயதிலேயே பேச்சியம்மாள் கைம்பெண்ணாக மாறினார். இதனால் பேச்சியம்மாளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு குடும்பத்தினர் வேறு திருமணம் செய்து கொள்ளும்படி வலியுறுத்தினர்.
பெண் குழந்தை பிறந்தது
இதை பேச்சியம்மாள் விரும்பவில்லை. இதனால் குடும்பத்தினர் வலியுறுத்தியும் பேச்சியம்மாள் வேறு திருமணம் செய்து கொள்ளவில்லை. இதற்கிடையே 15 நாள் திருமண வாழ்க்கையால் பேச்சியம்மாள் கர்ப்பமானது தெரியவந்தது. அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. கணவர் இல்லாத சூழலில் பேச்சியம்மாள் மட்டுமே வேலைக்கு சென்று சம்பாதிக்க வேண்டிய நிலை இருந்தது. இதனால் அவர் வேலைகளுக்கு சென்றார். அப்போது அச்சுறுத்தல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
ஆணாக மாறினார்
இதனால் அவர் தன்னை பாதுகாப்பதோடு, மகளையும் பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் என முடிவு செய்தார். இதனால் அவர் ஆணாக மாற முடிவு செய்தார். இதையடுத்து பேச்சியம்மாள் தனது பெயரை முத்து என மாற்றம் செய்தார். முதலில் தான் வசித்த முடிவைத்தானேந்தல் பகுதியை விட்டு வெளியேறினார். திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று மொட்டை அடித்து கொண்ட பேச்சியம்மாள் ஆண்களை போன்று சட்டை லுங்கி, வேஷ்டி அணிய துவங்கினார். மேலும் இவற்றை தளர்வாக அணிவதோடு, கிராப் வெட்டி தன்னை ஆண் என காட்டி கொண்டார். மேலும் முத்து என்ற பெயரில் அவர் ஆணாகவே பல ஊர்களில் வலம் வர துவங்கினார்.
டீக்கடை முதல் 100 நாள் வேலை வரை
டீக்கடை முதல் பரோட்டோ கடை வரை முத்து என்ற பெயரில் பேச்சியம்மாள் வேலை செய்தார். இதுதவிர 100 நாள் வேலை, பெயிண்ட் அடிப்பது உள்ளிட்ட பணிகளையும் அவர் செய்து வந்தார். தற்போதும் பரோட்டோ மாஸ்டர், முத்து மாஸ்டர் என்ற பெயரிலேயே பேச்சியம்மாள் அடையாளம் காணப்படுகிறார். கஷ்டப்பட்டு தனது பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்தார். இப்போது பேச்சியம்மாளுக்கு 57 வயது ஆகிறது.
உண்மை தெரிந்தது எப்படி?
30 ஆண்டுகளுக்கு மேலாக ஆணாக வலம் வந்த பேச்சியம்மாளுக்கு தற்போது வயது முதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் முன்புபோல் பணி செய்ய முடியவில்லை. இதனால் அவர் வயதான பெண்கள் உள்பட பெண்களுக்கு வழங்கும் அரசு சார்பிலான உதவிகளை பெற விரும்புகிறார். ஆனால் அவரது ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வங்கி புத்தகங்களில் முத்து என்ற பெயர் உள்ளது. இதனால் அவருக்கு அதன் பயன்கள் கிடைக்கவில்லை. இந்நிலையில் தான் பெண் என குடும்பத்தினருக்கு மட்டுமே தெரிந்த விஷயம் தற்போது வெளியே தெரியவந்துள்ளது.
பேச்சியம்மாள் கூறியது என்ன?
இதுபற்றி பேச்சியம்மாள் கூறுகையில், ‛‛நான் பாதுகாப்பாக உணர வேண்டும். மகளுக்குத் திருமணம் முடித்துக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. 15 நாட்களில் எனது திருமண வாழ்க்கை முடிந்தது. சேலை உடுத்தி வேலைக்கு சென்றேன். ஒருவர் என்னை மறித்தார். இதனால் நானும், எனது மகளும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆணாக மாறினேன். கணவர் இறந்தபோது இறப்புச் சான்று வாங்காத நிலையில், ஆதார் அட்டையில் முத்து என்ற ஆண் பெயரே இருப்பதால் விதவை நிதி உதவி, முதியோர் ஓய்வூதியத்தொகை எதுவும் கிடைக்கவில்லை. கிடைத்தால், தள்ளாத வயதில் உதவியாக இருக்கும்'' என்றார்.
மகள் கூறுவது என்ன?
இதுகுறித்து அவரது மகள் சண்முகசுந்தரி (36) கூறுகையில், ‛‛நான் சிறுவயதில் தந்தையை இழந்ததால் எனக்கு அப்பா நினைவு வரக்கூடாது எனவும், சமூகத்தில் ஒரு பெண்ணாக இருந்து வேற விதமான பிரச்சினைகளை சந்திக்காமல் இருக்கவும் எனது அம்மா விரும்பினார். இதனால் அவர் ஆணாக மாறினார். கிடைக்கும் வேலைகளை செய்து வந்தார். பல வேலைகளை செய்தார். டீ மாஸ்டராக கூட சென்னையில் 4 ஆண்டுகள் பணி செய்தார். என்னை வளர்க்க மிகவும் கஷ்டப்பட்டார். இருப்பினும் தாய்க்கு முதியோர் ஓய்வூதியத்தொகை கிடைக்கவில்லை. இது கிடைத்தால் நன்றாக இருக்கும்'' என்றார்.
பாராட்டு
பேச்சியம்மாளின் இந்த துணிவான முடிவு மற்றும் தியாக வாழ்க்கையை அனைவரும் பாராட்டி வருகின்றனர். மேலும் பேச்சியம்மாளுக்கு அரசு சார்பில் உதவிகள் அளிக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் பேச்சியம்மாளும் அரசு உதவி செய்யும் எனும் நம்பிக்கையில் காத்திருக்கிறார்.