சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு: மதுரை உயர் நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு
தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை மனுவை தள்ளுபடி செய்த கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து மதுரை உயர்நீதிமன்ற கிளை அறிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020 ஜுன் மாதம் போலீஸ் ஸ்டேஷனுக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
பிறகு, போலீசார் தாக்கியதில் 2 பேருமே அடுத்தடுத்து உயிரிழந்துவிட்டனர்.
9 பேர் கைது
இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்எஸ்ஐக்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், காவலர்கள் என 9 பேரை சிபிஐ போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. குற்றம்சாட்டப்பட்ட 9 பேரில் எஸ்எஸ்ஐ ரகுகணேஷ் உள்ளிட்டோர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கீழமை நீதிமன்றம் முடிவு செய்யலாம்
இந்த நிலையில், தந்தை மகன் கொலை வழக்கில் கைதான போலீசார் மீது சிபிஐ 2-வது குற்றப்பத்திரிக்கை அடிப்படையில் குற்றச்சதி பிரிவுகளின் குற்றச்சாட்டு பதிவு செய்வது குறித்து கீழமை நீதிமன்றம் முடிவு செய்யலாம் என்று மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மதுரை உயர் நீதிமன்றக்கிளையில் சிபிஐ ஏடிஎஸ்பி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் உயிரிழந்தனர்.
2 குற்றப்பத்திரிகை தாக்கல்
இந்த சம்பவம் தொடர்பாக சாத்தான் குளம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக இருந்த ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்களாக பணியாற்றிய ரகு கனேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 9 போலீஸ்காரர்களை சிபிஐ கைது செய்தது. இது தொடர்பான வழக்கு மதுரை கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக 2 குற்றப்பத்திரிகைகளை சிபிஐ தாக்கல் செய்துள்ளது. இதில், ஸ்ரீதர் உள்பட 9 பேர் மீது குற்றச்சதி பிரிவில் குற்றச்சாட்டு பதிவு செய்ய வேண்டும் என்று சிபிஐ விடுத்த கோரிக்கையை ஏற்க நீதிபதி மறுத்துவிட்டர்.
குற்றச்சாட்டு பதிவு செய்ய..
சிபிஐ மனுவும் தள்ளுபடியானது. இந்த வழக்கில் குற்றச்சதியில் ஈடுபட்டதற்கான போதிய ஆதாரங்கள் உள்ளன. உரிய பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யாமல் இருப்பது குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக அமைந்துவிடும். எனவே சிபிஐ மனுவை தள்ளுபடி செய்த கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்வதோடு, ஸ்ரீதர் உள்பட 9 போலீஸ்காரர்கள் மீதும் உரிய பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்" என்று தெரிவிக்கபப்ட்டு இருந்தது.
தீர்ப்பு ஒத்தி வைப்பு
இந்த மனு இதற்கு முன்பாக மதுரை ஐகோர்ட் கிளையில் விசாரணைக்கு வந்த போது காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சிபிஐயின் கோரிக்கை ஆட்சேபம் தெரிவித்தார். ஏற்கனவே இந்த வழக்கில் உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யபட்டு இருப்பதால் சிபிஐ மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ஸ்ரீதர் தரப்பில் கோரப்பட்டது. இந்த வாதங்களை கேட்ட நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டது.
கீழமை நீதிமன்றம் முடிவு எடுக்கலாம்
இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதி, இளங்கோவன், சிபிஐ மனுவை தள்ளுபடி செய்த கீழமை நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. சிபிஐ தாக்கல் செய்த 2-வது குற்றப்பத்திரிகை அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக குற்றச்சதி உள்ளிட்ட பிரிவுகளை சேர்ப்பது தொடர்பாக கீழமை நீதிமன்றம் முடிவு எடுக்கலாம்" என்று உத்தரவிட்டார்.