பயந்து போய் இருக்காங்க.. அதிமுக, பாஜகவிற்கு கனிமொழி எம்பி கொடுத்த பதிலடி
தூத்துக்குடி: எதையும் செய்யாதவர்கள் தி.மு.க ஆட்சி செய்வதை பார்த்து பயந்து போய் தான் தி.மு.க ஆட்சி ஏதும் செய்யவில்லை என பேசி வருகிறார்கள் என கோவில்பட்டி அருகே கனிமொழி எம்பி பேசினார்.
10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் செய்யாததை 100 நாட்களில் செய்தவர்தான் முதல்வர் முக ஸ்டாலின் என்றும் தூத்துக்குடி தொகுதி எம்பி கனிமொழி தெரிவித்தார்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தீத்தாம்பட்டியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் டி.பெரியசாமி தலைமையில் நடந்தது. இதில், சிறப்பு அழைப்பாளர்களாக கனிமொழி எம்.பி., சமூக நலம் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் கலந்து கொண்டு கிராம மக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். தொடர்ந்து அந்த ஊராட்சி சேர்ந்த பொதுமக்கள் தங்கள் ஊராட்சியில் உள்ள பிரச்சினைகளை தெரிவித்தனர்.

தூத்துக்குடி
இதைத் தொடர்ந்து பேசிய கனிமொழி எம்.பி, "பேருந்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டும் என கேட்டுள்ளீர்கள். அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். தொடர்ந்து உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களுக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் தான் அதிகளவு தீர்வு காணப்பட்டுள்ளது. இதுபோல் தொடர்ந்து மக்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்.

விவசாயம்
மேலும் குழந்தைகளுக்கு திருமண செய்யகூடாது; படிக்க வைக்க வேண்டும். பெண்கள் உரிமைகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு கல்வி முறையாக வழங்க வேண்டும். மேலும் விவசாயம் பாதுகாக்கப்படவேண்டும் சுற்றுப்புற சூழ்நிலை பாதுகாக்கப்பட வேண்டும். இதற்கு இந்த அரசு உறுதுணையாக இருக்கும் " என்றார்

கனிமொழி பதிலடி
தொடர்ந்து செய்தியாளர்களிடம் கனிமொழி எம்.பி பேசுகையில், "எதையும் செய்யாதவர்கள் தி.மு.க ஆட்சி செய்வதை பார்த்து பயந்து போய் தான் தி.மு.க ஆட்சி ஏதும் செய்யவில்லை என பேசி வருகிறார்கள். எதிர்க்கட்சிகள் மற்றும் அ.தி.மு.கவினர் தி.மு.க ஆட்சி ஏதும் செய்யவில்லை என விமர்சனம் செய்து வருகிறார்கள். ஆனால், பதவியேற்ற 100 நாட்களில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பாடுகள்தான் எதிர்க்கட்சிகள் மற்றும் அதிமுகவினரின் விமர்சனத்திற்கான பதில்" என்றார்.

பலர் பங்கேற்பு
நிகழ்ச்சிகளில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, கோட்டாட்சியர் சங்கரநாராயணன், வட்டாட்சியர் அமுதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், பாலசுப்பிரமணியன்,ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், திமுக பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, ஒன்றிய திமுக செயலாளர் பீக்கிலிபட்டி முருகேசன், நகர திமுக செயலாளர் கருணாநதி, மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications