திருச்செந்தூரில் அற்புதம்.. கோவில் கலச நவதானியம் 12 ஆண்டுகளுக்கு பின் எப்படி இருக்கு பாருங்க! பரவசம்
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் குடமுழுக்குக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இக்கோயில் கோபுரத்திலிருந்த கலசத்தில் வைக்கப்பட்டிருந்த வரகு தானியம் 15 ஆண்டுகளுக்கு பிறகும் நல்ல நிலையில் இருந்தது பக்தர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு கோயிலிலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கடந்த 2009ம் ஆண்டு தூத்துக்குடியின் திருச்செந்தூர் முருகன் கோயிலில் குடமுழுக்கு நடைபெற்றது. இதனையடுத்து 2021ம் ஆண்டு குடமுழுக்கு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்போது கொரோனா தொற்று காலகட்டம் என்பதால் குடமுழுக்கு நடைபெறவில்லை. இதனையடுத்து இதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இன்று கோயில் கோபுரங்களில் உள்ள கலசங்களை மாற்றும் பணிகள் நடைபெற்ற நிலையில், 137 உயரத்திலிருந்த கலசத்திலிருந்து வரகு தானியம் எடுக்கப்பட்டிருக்கிறது. சுமார் 12 ஆண்டுகள் கடந்த பின்னரும் இந்த வரகு அப்படியே இருப்பதாக பணியாளர்கள் கூறியுள்ளனர். இதை கண்டு பக்தர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.
கோயில் கலசங்களில் தானியங்கள் வைக்கப்படுவது குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. குறிப்பாக, வறட்சி, போர் உள்ளிட்ட காலங்களில் தானியங்களை மீண்டும் விதைக்கவே கலசத்தில் தானியம் வைக்கப்படுகிறது என்று சிலர் கூறுகினர். மேலும் சிலர், வெள்ளம் போன்ற காலத்தில் தானியங்கள் பாதுகாப்பாக இருக்கவே கோயில் கலத்தில் வைக்கப்படுகிறது என்றும், வெள்ளம் ஊர் முழுவதையும் அழித்துவிட்டாலும் கலச தானியத்தை எடுத்து விதைப்பு செய்யலாம் என்றும் கூறுகின்றனர்.
ஆனால், இந்த கருத்துக்கள் தவறானவை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உதராணமாக தானியத்தை மீண்டும் பயன்படுத்த வேண்டும் எனில், அது 13% கீழ் ஈரப்பத நிலையில் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், இதே ஈரப்பதம் 5%க்கும் கீழ் குறைந்துவிட்டாலும் அதை பயன்படுத்த முடியாது எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அதாவது 13% ஈரப்பதத்தை தாண்டவும் கூடாது, 5% ஈரப்பதத்திற்கு குறையவும் கூடாது. குறையும் தானிய விதைகள் மலட்டுத்தன்மை அடைந்துவிடும். ஈரப்பதம் அதிகமாகும் பட்சத்தில் பூச்சி தாக்குதலுக்கு உள்ளாக கூடும். எனவே, சரியான ஈரபதத்தை பராமரிக்க கோயில் கலசங்கள் சரியான இடம் கிடையாது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
கோயில் கலசங்கள் பெரும்பாலும் செம்பு உலோகத்தால் செய்யப்பட்டிருக்கும். இது எளிதில் வெப்பத்தை கடத்தும். எனவே தானியங்கள் அதன் ஈரப்பதத்தை முற்றிலும் இழந்துவிடும். எனவே இதை கொண்டு விதைப்பு மேற்கொள்ள முடியாது. அதேபோல கலசங்களின் அளவும் மிக சிறியது. இதில் உள்ள தானியத்தை வைத்து ஊருக்கு தேவையான அளவுக்கு விதைப்பை போட முடியாது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
அப்படியெனில், கலசங்களில் தானியங்களை வைக்கும் பழக்கம் ஏற்பட்டது ஏன்? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கும் ஆய்வாளர்கள் பதில் வைத்திருக்கிறார்கள்.
தமிழ் சமூகத்தில் தானியங்கள் என்பது செழிப்புக்கான அறிகுறி. திருமண சடங்குகளில் தானியங்கள் முக்கிய இடம் பெற்றிருக்கும். அதேபோல மரணத்தின் இறுதி சடங்குகளிலும் தானியம் முக்கிய இடம் பெற்றிருக்கும். காரணம் திருமணத்தின்போது செழிப்பாக வாழ வேண்டும் என்றும், இறப்பின்போது செழிப்பாக இருந்தார் என்பதற்காகவும் தானியங்கள் வைக்கப்படுகின்றன.
அதேபோல தெய்வம் என்று வரும்போதும் அவைகள் செழிப்பாக இருக்க வேண்டும் என்று தானியங்கள் வைக்கப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
எப்படியாயினும் திருச்செந்தூர் கோயில் கோபுரத்தில் வரகு தானியம் நல்ல நிலைமையில் கண்டெடுக்கப்பட்டது பக்தர்கள் மத்தியில் பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications