ராத்திரி 2 மணி வரைக்கும் கண் முழிச்சு வைத்தியம் பாத்திருக்கேன் தெரியுமா.. நெகிழ்ந்த தமிழிசை
தூத்துக்குடி: "ராத்திரி 2 மணி வரைக்கும் கண்முழிச்சு வைத்தியம் பார்த்திருக்கேன்.. என்கிட்ட ஒரு வாரத்துக்கு முன்னாடியே அப்பாயின்மென்ட் வாங்கி, காத்திருந்து சிகிச்சை பெற்று போவார்கள்" என்று தமிழிசை சவுந்தராஜன் தெரிவித்துள்ளார்.
ஒரு டாக்டர் என்பதையும் தாண்டி தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜனை பற்றி ஆழமாக நமக்கு தெரியாது.. தெரிந்திருக்கவும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது.
ஆனால் கோவில்பட்டியில் பிரச்சாரம் செய்தார். வழக்கமாக அரசியல் சம்பந்தமாகவும் பேசிவிட்டு கருத்து சொல்பவர், திடீரென தனது மருத்துவ துறையை பற்றியும் பேசினார். உண்மையிலேயே அப்போதுதான் அவரது அறிவும் திறமையும் இன்னும் பட்டவர்த்தனமாக வெளிப்பட்டது. தனது படிப்பு குறித்து தமிழிசை பேசிய விவரம் இதுதான்:
சிவகங்கையும் ராகுல் காந்தியின் பரிசீலனையில் இருந்தது.. ப.சிதம்பரம் பரபர தகவல்
நன்றாக படிப்பேன்
"இப்போ அரசியலில் நிறைய பேர் படிக்காமலே டாக்டர் பட்டங்களை வாங்குவார்கள். ஒருவேளை டாக்டராக சரியாக படிக்காததால்தான் தமிழிசை அரசியலுக்கு சென்று விட்டாரோ? என்று சிலர் நினைக்கலாம். ஆனால் நான் அப்படி இல்லை. நன்றாக படிப்பேன்.
குழந்தைகள்
மகப்பேறு மருத்துவ உயர் சிறப்பு படிப்புகளை, கனடா, ஆஸ்திரேலியா நாட்டுக்கு சென்று படித்திருக்கிறேன். கருவில் இருக்கும் குழந்தைக்கு குறைபாடுகள் இருந்தால், அதனை எப்படி கருவிலே சரி செய்வது என்ற படிப்பினை படித்திருக்கிறேன் என்னுடைய ஆஸ்பத்திரியில் ராத்திரி 2 மணி வரைக்கும் கண்விழித்து பெண்களுக்கு மருத்துவம் பார்த்தேன்.
துணை பேராசிரியர்
என்கிட்ட சிகிச்சைக்கு வர்றவங்க ஒரு வாரத்துக்கு முன்னாடியே அப்பாய்ன்மென்ட் வாங்கி, வெயிட் பண்ணி சிகிச்சை பெறுவார்கள். நான் மருத்துவ கல்லூரியில் துணை பேராசிரியராக வேலை பார்த்திருக்கிறேன். நான் நினைச்சிருந்தா, சுயநலமாவே வாழ்ந்திருக்கலாம். ஆனால் என் நாட்டு மக்களுக்கு ஏதாவது செய்யணும்னு நினைச்சுதான் அரசியலுக்கு வந்துள்ளேன்" என்றார்.
விமர்சனம்
ஆயிரம் சொல்லுங்க.. தமிழிசையின் படிப்புக்கும் அவரது துறைக்கும் நாம் தலைவணங்கியே ஆக வேண்டும்! ஒரு நபரை பற்றி முழுசாக தெரியாமல், தெரிந்து கொள்ளவும் முயற்சி செய்யாமல், ஒரு செகண்டில் தாறுமாறாக கமெண்ட் போட்டு விமர்சனம் செய்து விடுகிறோம். அதுவும் தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது எவ்வளவு கீழ்த்தரமான காரியம்? ஆனால் ஒன்று.. இந்த படிப்பை எத்தனை கோடி கொட்டி கொடுத்தாலும் எல்லோராலும் படித்து விட முடியாது என்பதுதான் சத்தியம்!