ஸ்டெர்லைட்டை உடனே திறக்க உச்சநீதிமன்றம் கூறவில்லை: கலெக்டர்
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்கும்படி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கவில்லை என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, பாத்திமா பாபு என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த, உயர்நீதிமன்றம் தமிழக அரசின் உத்தரவே தொடரலாம் என தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா குழுமம் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. அதில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டு இருந்தது. இதனால் சூழ்நிலையில் தூத்துக்குடியில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் மாலை 5 மணியளவில் நிருபர்களை சந்தித்தார் அந்த மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி.
அப்போது அவர் கூறுகையில், பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கு பட்டியலுக்கு வந்துள்ளது. எனவே விரைவில் அந்த மனு மீதான விசாரணை தொடங்கும். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழக அரசின் சட்டப் போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாத்திமா பாபு எதிர்மனுதாரராக உள்ள வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பில் கூட உடனடியாக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்ற எந்த ஒரு ஷரத்தும் தெரிவிக்கப்படவில்லை. பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பில் பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த நிபந்தனைகளை ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் பூர்த்தி செய்த பிறகுதான் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் இன்னும் அந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை. இந்த நிலையில்தான், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. எனவே ஸ்டெர்லைட் ஆலை உடனடியாக திறக்கப்படாது. இவ்வாறு சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.