ஆதரவற்ற பெண்களுக்கு கைகொடுக்கும் தமிழ்நாடு அரசு.. அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்த சூப்பர் திட்டம்!
தூத்துக்குடி: தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் 3,499 குழந்தைகள் தாய் அல்லது தந்தையை இழந்துள்ளதாக தமிழ்நாடு சமூகநலத்துறை மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்தார்.
குடும்ப சூழ்நிலைகள் காரணமாக வீட்டை விட்டு வெளியேறக் கூடிய பெண்கள் தங்குவதற்கும் அவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 48 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சேவை மைய கட்டிடத்தை அமைச்சர் பி.கீதா ஜீவன் திறந்து வைத்தார்.

அதன்பின்பு நிருபர்களுக்கு பேட்டியளித்த கீதா ஜீவன் கூறியதாவது:- பல்வேறு குடும்ப சூழ்நிலை காரணமாக வீட்டைவிட்டு பெண்கள் வெளியேறுகின்றனர் அவர்களுக்கு அடைக்கலம் அளிக்கும் வகையில் இந்த சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கே மருத்துவர்கள், பெண்களுக்கு ஆலோசனை வழங்கக்கூடிய கவுன்சிலர்கள், தன்னார்வலர்கள் பணியில் இருப்பார்கள். இந்த மையம் குறுகிய கால சேவை மையமாக செயல்படும்.
இதேபோன்று சேவை மையம் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டு வருகிறது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தவர்களின் 93 குழந்தைகள் தாய்,தந்தை இரண்டு பேரையும் இழந்துள்ளனர். 3 ஆயிரத்து 499 குழந்தைகள் தாய் அல்லது தந்தை இரண்டு பேரில் ஒருவரை இழந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் பெற்றோர் இரண்டு பேரையும் இழந்த குழந்தைகள் நான்கு பேர் உள்ளனர். தாய் அல்லது தந்தை இருவரில் ஒருவரை இழந்தவர்களாக 77 குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனர்.
இது குறித்து தொடர்ந்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. அவர்களுக்கு தமிழக அரசு அறிவித்த வைப்புத்தொகை உள்ளிட்ட திட்டங்கள் முறைப்படி வழங்கப்படும். கல்லூரி வரை படிக்கும் மாணவர்களுக்கு இலவச கல்வி அளிக்கப்பட்டு வரும் நிலையில் உயிரிழந்தவர்களின் பிள்ளைகள் கல்லூரிப்படிப்பு அவர்களது படிப்பு தடை படாமலிருக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதற்கேற்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கீதா ஜீவன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications