சூரசம்ஹாரம்..திருச்செந்தூர் கடற்கரை வானத்தில் வட்டமிட்ட கருடன்.. பக்தர்கள் பரவசம்..அரோகரா முழக்கம்
தூத்துக்குடி: திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் நிகழ்ந்த போது வானத்தில் கருடன் மூன்று முறை வட்டமிட்டது. அப்போது கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அரோகரா முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.
வீரத்தால் முருகனை வெல்ல முடியாது என்றுணர்ந்த சூரபத்மன், இறுதியில் தன் மாயையால் வெல்ல நினைத்து மாமரமாகி நின்றான். வீரத்தை வெல்ல சக்தியாக நின்ற வேல், மாயையை வெல்ல ஞானவேலாக மாறியது. மாயையை இருகூராகக் கிழித்தது. ஞானத்தின் தீண்டுதலால் மாயை அகல அந்த மாமரம், மாயை அற்ற சேவலாகவும் மயிலாகவும் மாறியது.
சூர சம்ஹாரம் ஞான உபதேசமாக மாறிப்போக பகைவனான சூரபத்மன் முருகக் கடவுளின் புகழ்போற்றும் கொடியும் வாகனமும் ஆனான். ஆணவம் அழிந்து ஞானமும் பெற்றுவிட்டால் எந்த ஆன்மாவுமந்தப் பரமாத்மாவோடு ஐக்கியமாகிவிடலாம் என்பது கந்த சஷ்டி சொல்லும் வாழ்க்கை ரகசியம். அந்த ஞானத்தைப் பெற்றுத் தரும் அற்புத விரதமே கந்த சஷ்டி. முருகபக்தர்கள் ஆறுநாள்கள் விரதமிருந்து முருகனை வழிபட்டனர்.

திருச்செந்தூர் சூரசம்ஹாரம்
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல லட்சக்கணக்கான பங்கேற்றனர். சுவாமி ஜெயந்திநாதர் வண்ண மலர்களாலான மாலைகள் அணிந்து அலங்காரத்துடன் கையில் வேல் ஏந்தி சூரபத்மனை வதம் செய்வதற்காக கடற்கரை முகப்பில் எழுந்தருளினார்.

போருக்கு வந்த அசுரர்கள்
முதலில் மாயையே உருவாக கொண்ட யானைமுகனான தாரகாசூரன் தனது பரிவாரங்களுடன் முருகபெருமானிடம் போர் புரிவதற்காக ஆக்ரோஷமாக தலையை ஆட்டியவாறு வந்தான். அவன் முருகபெருமானை 3 முறை சுற்றி வந்து சுவாமிக்கு எதிரே நின்று போரிட தயாரானான். தாரகாசூரனை வேல் கொண்டு முருகபெருமான் வதம் செய்தார்.

சிங்கமுகாசுரன்
தொடர்ந்து கன்மமே உருவான சிங்கமுகாசூரனும் முருகபெருமானுடன் போரிடுவதற்காக உக்கிரத்துடன் வந்தான். அவன் முருகபெருமானை 3 முறை வலம் வந்து நேருக்கு நேர் போர் புரிய தயாரானான். இதனையடுத்து சிங்கமுகாசூரனையும் முருகபெருமான் வேலால் வதம் செய்தார்.

சூரசம்ஹாரம்
ஆணவமே உருவான சூரபத்மன் தலையை ஆட்டியவாலே ஆணவத்துடன் முருகபெருமானுடன் போரிட வேகமாக வந்தான். முருகபெருமானை 3 முறை சுற்றி போரிட வந்த சூரபத்மனையும் சக்தி வேல் எடுத்து சம்ஹாரம் செய்தார். இறுதியாக மாமரமும், சேவலுமாக உருமாறி வந்த சூரபத்மனை முருகபெருமான் சேவலும், மயிலுமாக மாற்றி தன்னுடன் ஆட்கொண்டார்.

வட்டமிட்ட கருடன்
மயிலை தனது வாகனமாகவும், சேவலை தனது கொடியாகவும் வைத்துக் கொண்டார். சூரசம்ஹாரம் நிகழ்ந்த போது திருச்செந்தூரில் வானத்தில் கருடன் 3 முறை சுற்றி வந்து வட்டமிட்டது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா.. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்று முழக்கமிட்டனர்.












Click it and Unblock the Notifications