6 வருஷ காதல்! கயத்தாறில் "கழுத்தறுத்த" காதலன்.. வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு.. பெண் தர்ணா
தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே கயத்தாறு தாலுகா அலுவலகம் முன்பு காதலனுடன் சேர்த்து வைக்கக் கோரி பெண் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறு உள்ள சால்நாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமண பெருமாள். இவரது மகள் எபிலாதேவி. இவரும் அதே பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.
கல்லூரி படித்த போது இருவருக்கும் காதல் பற்றி கொண்டதாக தெரிகிறது. எபிலாதேவியை திருமணம் செய்து கொள்வதாக பாலமுருகன் பல முறை உறுதி அளித்ததாக தெரிகிறது.
எபிலா தேவி
இந்த நிலையில் எபிலாதேவிக்கு கொடுத்த வாக்குறுதியை மீறி நவம்பர் 7 ஆம் தேதி பாலமுருகன் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளப் போவதாக எபிலாதேவிக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால் அதிர்ச்சி அடைந்த எபிலா தேவி கடம்பூர் காவல் நிலையத்தில் பாலமுருகன் மீது புகார் அளித்துள்ளார்.
6 ஆண்டுகள்
தன்னை 6 ஆண்டுகளாக காதலித்துவிட்டு நகை, பணத்திற்காக வேறு ஒரு பெண்ணை பாலமுருகன் திருமணம் செய்ய முன்வந்துள்ளார் என்றும் தனது புகாரில் எபிலாதேவி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் காவல் நிலையத்தில் பாலமுருகனுடைய உறவினர் ஒருவர் பணியாற்றி வருவதால் அவருடைய செல்வாக்கை பயன்படுத்தி பாலமுருகனை போலீஸார் விடுவித்ததாக தெரிகிறது.
அதிர்ச்சி அடைந்த எபிலாதேவி
இதனால் மேலும் அதிர்ச்சியடைந்த எபிலாதேவி தன்னை காதலித்துவிட்டு ஏமாற்றிய பாலமுருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், 7 ஆம் தேதி வேறு ஒரு பெண்ணுடன் நடைபெறுவதாக இருக்கும் திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக கயத்தாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தார்.
பரபரப்பு
உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து எபிலா தேவி அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். இதையடுத்து எபிலாதேவி தனது கோரிக்கை மனுவை சமூகப் பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் ஐயப்பனிடம் வழங்கினார். வட்டாட்சியர் அலுவலகத்தில் பெண் தர்ணா போராட்டத்தால் பரபரப்பு எழுந்தது.