வாட்ஸ்அப்ல கட்டுக்கதைகளை சொல்லுவாங்க.. நம்பாதீங்க.. மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்!
நம்மை படிக்க விடாமல் தடுக்க ஃபேஸ்புக், வாட்ஸ் அப் மட்டுமல்லாமல் பத்திரிகைகளிலும் கூட கட்டுரை வெளியிடுவார்கள் என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
வேலூர் : "கல்விதான் யாராலும் திருடமுடியாத சொத்து. அதை அடையக்கூடாது என பலரும் பல கட்டுக் கதைகளை சொல்லுவார்கள். Facebook, Whatsapp மட்டுமல்ல, பத்திரிகைகளில் கட்டுரைகள் கூட வெளியிடுவார்கள். அவர்களால் படிக்காமல் முன்னேறிய சிலரைத் தான் காட்ட முடியும். அதற்காக படித்து முன்னேறிய பலரை மறைத்து விட முடியாது." என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில், கலைஞர் மு.கருணாநிதி மாணவர் விடுதி மற்றும் Pearl ஆராய்ச்சிக் கட்டடத்தை திறந்து வைத்தார்.
பின்னர் மாணவர்கள் மத்தியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "படியுங்கள்.. நிறைய படியுங்கள். படித்து உலக அரங்கில் உயர்ந்த பதவிகளில் இருப்பது பெற்றோருக்கும் உங்களுக்கு பெருமை. எனக்கும் பெருமை. இந்த தமிழ்நாட்டிற்கும் பெருமை" எனத் தெரிவித்தார்.
''அண்ணன் துரைமுருகன் படித்த அரசுப் பள்ளி இது''! எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கு! ஸ்டாலின் பூரிப்பு!
தமிழ் பெயர் வையுங்கள்
முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "விஐடி பல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன் கல்விப் பணிகளோடு சேர்த்து தமிழ்ப் பணி ஆற்றுவதையும் அவர் கைவிடவில்லை. அதுதான் எனக்கு மிக மிகப் பிடித்த ஒன்று. உலகத் தமிழ் அமைப்பாக தமிழியக்கத்தை நடத்தி வருகிறார். இது மிக மிக முக்கியமான ஒன்று. பெரியாரும், அண்ணாவும், கருணாநிதியும் உள்ளே இருந்து அவரை இயக்கிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. தமிழ் பெயரைத்தான் வைக்க வேண்டும் என்று அவர் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறார். அதைத்தான் நான் சீர்திருத்த திருமண நிகழ்ச்சிக்கு செல்கிறபோது தொடர்ந்து சொல்லிக்கொண்டு வருகிறேன். மணமக்களுக்கு நான் சொல்கிற ஒரு அறிவுரை என்னவென்று கேட்டீர்களானால், உங்களுக்கு பிறக்கின்ற குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை வையுங்கள்.
தமிழ் என்று அழைக்கும் சுகம்
ஏனென்றால், தமிழைப் பற்றி தலைவர் கருணாநிதி அடிக்கடி எடுத்துச் சொல்வார்.
உளங்கவர் ஓவியமே!
உற்சாக காவியமே!
ஓடை நறுமலரே!
ஒளியெனும் புதுமலரே!
அன்பே! அமுதே! அழகே!
உயிரே! இன்பமே!
இனிய தென்றலே!
பனியே! கனியே!
பழரசச் சுவையே!
மரகத மணியே!
மாணிக்கச்சுடரே!
மன்பதை விளக்கே!
என்றெல்லாம் தமிழை அழைக்கத் தோன்றுகிறது. இருந்தாலும், தமிழைத் தமிழே என்று அழைக்கக்கூடிய சுகம் வேறு எதிலும் கிடையாது என்று அடிக்கடி எடுத்துச் சொல்வார். அப்படிப்பட்ட இந்த அழகு தமிழ் மொழியில் பெயர் சூட்டுங்கள் என்று நானும் தொடர்ந்து சொல்லி வருகிறேன்.
திராவிட மாடல் அரசு
இன்றைக்கு கருணாநிதி பெயரால் ஆண்கள் விடுதியை நான் இன்றைக்கு திறந்து வைத்திருக்கிறேன். 80 கோடி ரூபாய் மதிப்பில் 1,371 மாணவர்கள் தங்கி படிக்கக்கூடிய வகையில் இந்த விடுதி கட்டப்பட்டுள்ளது. அதேபோல் PEARL ஆராய்ச்சி பூங்காவையும் திறந்து வைத்துள்ளேன். 157 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இது கட்டப்பட்டுள்ளது. 69 ஆய்வகங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. ஆராய்ச்சிக் கல்விக்கு ஒரு தலைசிறந்த மையமாக இது அமையப் போகிறது. தமிழ்நாட்டு இளைஞர்கள் கல்வியில், அறிவில், சிந்தனைத் திறத்தில், தனித்த ஆற்றல்களில் தலைசிறந்த ஆளுமைகளாக வளருவதற்கு இதுபோன்ற ஆராய்ச்சிப் பூங்காக்களும், கல்லூரிகளும், விடுதிகளும் ஏராளமாக நமக்குத் தேவைப்படுகிறது. அவற்றை உருவாக்குகின்ற அரசாக நமது திராவிட மாடல் அரசு இன்றைக்கு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
பொன்முடி சொன்னார்
திராவிட மாடல் என்றால் சில விளக்கங்களை நம்முடைய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இங்கே குறிப்பிட்டுச் சொன்னார். ஆக திராவிட மாடல் என்றால் அனைத்துத் துறை வளர்ச்சி - அனைத்து மாவட்ட வளர்ச்சி - அனைத்து சமூக வளர்ச்சி - என்ற அடிப்படையில் இந்தியாவுக்கே வழிகாட்டக்கூடிய வகையில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இதனை அறிந்து பல்வேறு தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கும் - புதிய தொழில் நிறுவனங்களைத் தொடங்குவதற்கும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறார்கள்.
நான் முதல்வன்
இப்படி உருவாக்கக்கூடிய தொழில்களின் திறனுக்கேற்ற வல்லுநர்களை உருவாக்க வேண்டிய கடமை இந்த அரசுக்கு இருக்கிறது. அதனால்தான் அமைச்சர் பொன்முடி சொன்னது போல, கடந்த மார்ச் 1 ஆம் தேதி என்னுடைய பிறந்தநாள் அன்று அரசின் சார்பில் ஒரு திட்டத்தை நான் அறிவித்தேன். அதுதான் நான் முதல்வன் என்ற அந்தத் திட்டம். பள்ளிகளில் இடையில் நின்று விடக்கூடிய மாணவராக இருந்தாலும் - கல்லூரிப் படிப்பைத் தொடர முடியாத மாணவராக இருந்தாலும் - அவர்களது படிப்பை மீண்டும் தொடர அனைத்துத் தூண்டுதல்களையும் நம்முடைய திராவிட மாடல் அரசு செய்து வருகிறது.
கல்விப் புரட்சி
அந்த வகையில் தமிழ்நாட்டில் மாபெரும் கல்விப் புரட்சி இன்றைக்கு நடந்து கொண்டிருக்கிறது. அது மென்மேலும் வளர்ச்சி பெற தனியாருடைய பங்களிப்பும் அவசியம் தேவைப்படுகிறது. அதற்கு வி.ஐ.டி போன்ற கல்வி நிறுவனங்கள் நிச்சயமாக அரசுக்குத் துணைநிற்கும் என்ற நம்பிக்கை எனக்கு நிரம்ப இருக்கிறது. நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருப்பது பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில், பள்ளிக் கல்வியும், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞருடைய ஆட்சிக் காலத்தில், கல்லூரிக் கல்வியும், முன்னேற்றம் அடைந்தது. நம்முடைய ஆட்சியில் உயர்கல்வியையும் தாண்டி, ஆராய்ச்சிப் படிப்புகளும் சிறந்து விளங்க வேண்டும் என்பதுதான் நம்முடைய திராவிட மாடல் ஆட்சியினுடைய இலட்சியமாக இருக்கிறது.
ஃபேஸ்புக், வாட்சப்பில் கட்டுக்கதை
என்னுடைய எண்ணத்திற்குச் செயல் வடிவம் கொடுக்க இந்த வி.ஐ.டி பல்கலைக் கழகம் உறுதுணையாக இருக்கும் என்று நான் மனதார நம்புகிறேன். சென்னை எப்படி மெடிக்கல் கேபிடல் என்று போற்றப்படுகிறதோ, அதேபோல், வேலூர் மாநகரம், இங்கு அமைந்துள்ள வி.ஐ.டி பல்கலைக் கழகத்தின் முயற்சியால், Capital of Research Studies என்ற வகையில் வளரும். மீண்டும் சொல்கிறேன். கல்விதான் யாராலும் திருட முடியாத சொத்து. அதனால் அந்த சொத்தை நீங்கள் அடையக்கூடாது என்று பலரும் பல கட்டுக் கதைகளை சொல்வார்கள். Facebook, Whatsapp மட்டுமல்ல, பத்திரிகைகளில் கட்டுரைகள் கூட வெளியிடுவார்கள். அவர்களால் படிக்காமல் முன்னேறிய சிலரைத்தான் காட்டமுடியும். அதற்காக படித்து முன்னேறிய பலரை மறைத்துவிட முடியாது.
நீங்கள் படியுங்கள்
நீங்கள் படியுங்கள், நிறைய படியுங்கள், படித்து உலக அரங்கில் தமிழ்நாட்டு மாணவர்கள் உயர்ந்த பதவியில் இருக்கிறதுதான் உங்கள் பெற்றோருக்கும், உங்களுக்கும் பெருமை, எனக்கும் பெருமை, இந்த தமிழ்நாட்டிற்கும் பெருமை. இந்த விஐடி-யில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமல்லாமல், பல்வேறு மாநில மாணவர்களும் படிக்கிறீர்கள். நீங்கள் எல்லாம் உயர்ந்த நிலையை அடைவதுதான் இந்தியாவிற்கே பெருமை." எனத் தெரிவித்தார்.