என் சாவுக்கு கவுன்சிலர்தான் காரணம்.. உருக்கமான கடிதம் எழுதிவிட்டு ஊராட்சி செயலாளர் தற்கொலை
வேலூர்: தனது மரணத்துக்கு கவுன்சிலர் தான் காரணம் என கடிதம் எழுதி வைத்து விட்டு ஊராட்சி செயலாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒடுகத்தூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுக்கா ஒடுகத்தூர் அடுத்த ராமநாயினிகுப்பம் குப்பத்தை சேர்ந்தவர் ராஜசேகர் (39).
இலங்கையில் 4 புதிய அமைச்சர்கள் நியமனம் - அதிபர் கோத்தபாய ராஜபக்சே அறிவிப்பு
அதே கிராமத்தில் ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வந்தார். அதேபோல் அப்பகுதியில் ஹரி என்பவர் கவுன்சிலராக பணியாற்றி வந்துள்ளார்.
கவுன்சிலர் மிரட்டல்
இந்நிலையில், ஊராட்சிக்கு வழங்கப்படும் நிதிகளை தனக்கு வழங்க வேண்டும் என்று கவுன்சிலர் ஹரி, ராஜசேகரை வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு ராஜசேகர் மறுப்பு தெரிவித்ததால் உன் வேலையையும் உன் குடும்பத்தையும் ஒழித்து விடுவேன் என்றும் மிரட்டினார் என்ற குற்றச்சாட்டு உள்ளது.
பண மோசடி
மேலும், ராஜசேகரிடம் அவரது தம்பிக்கு ரேசன் கடையில் வேலை வாங்கி தருவதாக ஹரி கூறியுள்ளார். இதனை நம்பி பலரிடம் கடன் வாங்கி லட்சக்கணக்கில் கொடுத்துள்ளார் ராஜசேகர். ஆனால், உறுதியளித்தபடி ரேசன் கடையில் வேலை வாங்கி கொடுக்காமல், பெற்ற பணத்தையும் திருப்பித் தராமல் ஹரி மிரட்டியதாக கூறப்படுகிறது.
தூக்கிட்டு தற்கொலை
இதனால், மன உளைச்சலுக்கு ஆளான ராஜசேகர் நேற்று இரவு 8:30 மணிக்கு கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது, "மனைவி காந்திமதி என்னை மன்னித்து விடு, நான் உன்னை விட்டு போறேன். நம் குழந்தையை பத்திரமாக பார்த்துக்கொள். எனது இந்த முடிவுக்கு கவுன்சிலர் ஹரி மட்டுமே காரணம். எனது குடும்பத்தாரோ, நண்பர்களோ காரணம் இல்லை.
போலீஸ் விசாரணை
இது என் முழு சிந்தனையுடன் எடுத்த முடிவாகும்." என்று குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காந்திமதி அளித்த புகாரின் பேரில் போலீஸ் உதவி ஆய்வாளர் பத்மநாபன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.