அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ் ஆகனும்.. தங்கதேர் இழுத்து வேண்டி கொண்ட வேலூர் தொண்டர்கள்
வேலூர்: அதிமுகவில் பெரும் குழப்பம் நிலவி வரும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தான் கட்சியின் பொதுச்செயலாளராக வரவேண்டும் என வேண்டி அவரது ஆதரவாளர்கள் வேலூரில் உள்ள கோவிலில் தங்கத்தேர் இழுத்தனர்.
அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனையால் ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராக்க அவரது ஆதரவாளர்கள் முயன்று வருகின்றனர்.
இதற்கு ஓ பன்னீர் செல்வம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு நடந்த பொதுக்குழுவில் ஓ பன்னீர் செல்வத்தை, எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் அவமானப்படுத்தினர்.
அதிமுக பொதுக்குழு..எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் பதில்தர சென்னை நீதிமன்றம் உத்தரவு
நீதிமன்றத்தில் முறையீடு
தொடர்ந்து இருவரும் தங்களின் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். மேலும் இதுதொடர்பாக ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றம், டெல்லி உச்சநீதிமன்றம் நாடப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் ஆணையத்திலும் கட்சி விவகாரம் தொடர்பாக இருதரப்பும் தகவல்களை வழங்கி உள்ளது.
பெரும் குழப்பம்
இந்நிலையில் தான் ஜூலை 11ல் அதிமுக பொதுக்கூட்டத்தை நடத்தி எடப்பாடி பழனிச்சாமியை பொதுச்செயலாளராக்க அவரது ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இதனை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்ற முனைப்பில் ஓ பன்னீர் செல்வம் தரப்பில் செயல்பட்டு வருகின்றனர். இதனால் அதிமுகவில் பெரும் குழப்பம் ஏற்பட்டு வருகிறது.
சின்னம் கிடைக்கவில்லை
இந்த குழப்பத்தின் ஒருபகுதியாக தான் தற்போது நடைபெற மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், நகராட்சி மற்றும் மாநகராட்சி கவுன்சிலர் என மொத்தம் 34 பதவியிடங்களில் அதிமுகவினர் போட்டியிடவில்லை. அதிமுகவின் சின்னம் வழங்குவதற்கான படிவம் ஏ, பி ஆகியவற்றில் கையெழுத்திடுவது தொடர்பான பிரச்சனையால் அதிமுகவினர் சுயேச்சைகளாக களமிறங்கி உள்ளனர். ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி இடையேயான பதவி போட்டியால் தான் அதிமுக சார்பில் போட்டியிட முயன்ற தொண்டர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கவில்லை.
தங்கத்தேர் இழுத்த தொண்டர்கள்
இந்நிலையில் அதிமுகவின் பொதுச்செயலாளராக ஓ பன்னீர் செல்வம் ஆக வேண்டும் என வேண்டி வேலூரில் தொண்டர்கள் தங்கத்தேர் இழுத்துள்ளனர். வேலூர் கோட்டை வளாகத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோவிலில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக வர வேண்டும் என மாவட்டச் செயலாளர் அப்பு தலைமையிலான அதிமுக தொண்டர்கள் தங்கத்தேரை கோவிலை சுற்றி வடம் பிடித்து இழுத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். இதில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.