லோக்சபா தேர்தல் 2024: வேலூரில்.. தாமரை சின்னத்தில் களமிறங்கும் புதிய நீதிக்கட்சி ஏ.சி.சண்முகம்
வேலூர்: லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் புதிய நீதிக்கட்சியின் ஏ.சி.சண்முகம், தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலை எந்த கூட்டணியை வைத்து திமுக எதிர்கொண்டதோ, அதே கூட்டணியுடன் லோக்சபா தேர்தலுக்கு திமுக தயாராகி வருகிறது. ஆனால் மறுபுறம் அதிமுகவும், பாஜகவும் இரு துருவங்களாக பிரிந்து தேர்தலை எதிர்கொள்ள திட்டமிட்டுள்ளன. ஆனால், இதுவரை இந்த கட்சிகள் தங்கள் கூட்டணியை இறுதி செய்யவில்லை

கடந்த முறை பாஜகவும், ஒபிஎஸ்ஸுடன் கூடிய அதிமுகவும் சேர்ந்துதான் தேர்தலை எதிர்கொண்டது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்கவில்லை. தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் டிடிவி தினகரன், சசிகலா மற்றும் ஓபிஎஸ் ஆகியோருக்கு பலம் இருப்பதாக சொல்லப்பட்டாலும் மொத்தம் இருந்த 35 எம்எல்ஏ தொகுதிகளில் அதிமுக 14 தொகுதிகளிலும், பாஜக இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
இந்த முறை ஓபிஎஸ் அதிமுகவிலிருந்து கழற்றிவிடப்பட்டிருக்கிறார், பாஜகவும் பிரிந்திருக்கிறது. அதிமுகவை பொறுத்த அளவில், பாஜக இல்லாமல் இந்த தேர்தலை எதிர்கொள்ள திட்டமிட்டிருக்கிறது. எனவே சிறிய கட்சிகளை அணிதிரட்ட திட்டமிட்டிருக்கிறது. மறுபுறம் பாஜகவும், பாமக+தேமுதிக+உதிரி கட்சிகளை இணைக்க தீவிரம் காட்டி வருகிறது. இதன் பலனாக தற்போது புதிய நீதி கட்சியின் ஏ.சி.சண்முகம் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அளித்த பேட்டியில், “6 மாதமாக வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் பணியை மேற்கொண்டு வருகிறோம். வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தாமரைச் சின்னத்தில் போட்டியிடுகிறேன்” என்று கூறியுள்ளார். வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் ஏ.சி.சண்முகம் வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ளதாக அண்ணாமலை ஏற்கெனவே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications