நானே வருவேன்! பேய் பயத்தால் 60 ஆண்டுகளாக சுடுகாடே இல்லாமல் வாழும் கிராமத்தினர்! நம்ம தமிழ்நாட்டுலயா!
திருப்பத்தூர்: கடந்த 60 ஆண்டுகளாக பிணங்களை எரிக்கவும் புதைக்கவும் சுடுகாடு இல்லாமல் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கிராம மக்கள் சிலர் அவதியுற்று வருகின்றனர்.
சுடுகாடு அமைந்தால் காத்து கருப்பு தீண்டுவதாக ஒரு பகுதி மக்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். அதேபோல மற்றொரு தரப்பினர் இதனை மறுத்து சுடுகாடு வேண்டும் என போராடி வருகின்றனர்.
சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன பின்னரும் சுடுகாடு அமைந்தால் காத்து கருப்பு தீண்டுவதாக இன்னமும் நம்பிக்கொண்டு சுடுகாடு இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர் இந்த கிராம மக்கள்.

சுடுகாடு
வேலூரை அடுத்து உள்ள திருப்பத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது திருப்பதி எனும் கிராமம். இந்த கிராமத்தில் கடந்த 60 ஆண்டுகளாக சுடுகாடு வசதியில்லை என்று சொல்லப்படுகிறது. இது தொடர்பாக அப்பகுதி மக்களில் சில இளைஞர்கள் தொடர்ந்து அரசுக்கு மனு கொடுத்து சுடுகாடு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். பலனாக இடமும் ஒதுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தங்கள் சொந்த பணத்தை செலவு செய்து சுடுகாடு அமைய உள்ள இடத்தை சுத்தப்படுத்த தொடங்கினர் அங்குதான் பிரச்னை வெடித்துள்ளது.

நிலம் இல்லாதவர்களின் நிலை
கிராமத்தின் இதர மக்கள் ஒன்று திரண்டு இந்த முயற்சியை கைவிட வேண்டும் என்று மிரட்டல் விடுத்துள்ளனர். இதற்கான காரணம் இக்கிராமத்தில் சுடுகாடு அமைந்தால் பேய் தொல்லை அதிகரிக்கும் என்பதாக கிராம மக்கள் கூறுகின்றனர். இதுதான் கடந்த 60 ஆண்டுகளாக இந்த ஊருக்கு சுடுகாடு வராமல் இருப்பதற்கு காரணம். அதிலும் சொந்த நிலம் இருப்பவர்கள் தங்கள் நிலங்களில் பிணத்தை அடக்கம் செய்து விடுகின்றனர். ஆனால், நிலம் இல்லாதவர்களின் பாடு திண்டாட்டம்தான்.

மூடநம்பிக்கை
மேலும், இயற்கை மரணம் என்றால் ஊருக்குள் பிணம் வைக்க அனுமதிக்கப்படும். அதேவேளையில் விபத்து உள்ளிட்ட காரணங்களால் மரணம் எனில் அந்த உடல் ஊருக்குள்ளேயே கொண்டுவர முடியாது. அப்படி மீறி கொண்டுவந்தால் பேய், பிசாசுகள் ஊருக்குள் வந்துவிடும் என்பதுதான் இதற்கான காரணம். சில ஆண்டுகளுக்கு முன்னர் வீடுகளின் கதவுகளில் 'இன்று போய் நாளை வா' என எழுதி வைத்திருந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரவலாக பேசப்பட்டது. அந்த வகையில் இந்த ஊரிலும் இதேபோல எழுதியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

60 ஆண்டுக்கால எதிர்பார்ப்பு
இந்த பிரச்னையையடுத்து காவல் நிலையத்தில் வைத்து பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர விரும்பிய இளைஞர்கள் பேச்சு வார்த்தை கிராம மக்களை அழைத்துள்ளனர். ஆனால் எவரும் சுடுகாடு அமைக்க ஒப்புக்கொள்ளாததால் பிரச்னை தீவிரமானதேயொழிய முடிவுக்கு வரவில்லை. பின்னர் காவல்துறையினர் சமாதானம் பேசி இரு தரப்பினரையும் அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து 60 ஆண்டுகளுக்கும் மேலாக சுடுகாடு வசதி இல்லாத கிராமத்தில் இனியாவது சுடுகாடு அமைய வேண்டும் என்பதுதான் இளைஞர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

கோரிக்கை
அதே நேரத்தில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத பேயை கிராமத்திற்கு அழைத்து வந்துவிட கூடாது என்பது கிராம மக்களின் கோரிக்கையாக இருக்கிறது. எனவே அரசு இதில் தலையிட்டு கிராம மக்களின் மூட நம்பிக்கையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கைகள் மேலெழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications