250 வழக்குகளில் துப்பு துலக்கிய ‘சிம்பா’ மரணம்.. வீரவணக்கம் செலுத்திய சக மோப்ப நாய்கள்.. நெகிழ்ச்சி!
வேலூர் : காவல்துறையில் சிறப்பாகப் பணிபுரிந்த மோப்ப நாய் சிம்பா உயிரிழந்ததை அடுத்து, காவல்துறை மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. வேலூர் மாவட்ட எஸ்பி ராஜேஷ் கண்ணன், சிம்பா உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
வேலூர் மாவட்ட காவல்துறையில் துப்பறியும் நாய் படை பிரிவில் சிம்பா என்ற மோப்ப நாய் கடந்த 10 வருடங்களாக பணிபுரிந்து வந்தது.
மோப்ப நாய் சிம்பா, 250 கொலை, கொள்ளை மற்றும் போதைப் பொருள் கடத்தல் வழக்குகளில் திறம்பட செயல்புரிந்து, குற்றவாளிகளை கைது செய்ய உதவி புரிந்துள்ளது.
காங்கிரஸின் நடைப்பயண நாயகன்.. பாரத் ஜோடோ யாத்திரையில் தமிழகத்தை சேர்ந்த கணேசன் பலி.. ராகுல் அஞ்சலி
போலீஸ் மோப்ப நாய்கள்
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட காவல்துறையில் கொலை, கொள்ளை வழக்குகளில் துப்பு துலக்க மோப்ப நாய் பிரிவில் லூசி, சிம்பா, அக்னி, சாரா, ரீட்டா ஆகிய 5 நாய்கள் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதில் லூசிக்கு அதிக வயதானதால் ஓய்வு கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மோப்ப நாய் சிம்பா, கொலை, கொள்ளை குற்ற வழக்குகளில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க பயன்படுத்தப்பட்டு வந்தது. மூன்று மாத குட்டியாக கடந்த 2013ஆம் ஆண்டு மோப்ப நாய் பிரிவில் சேர்க்கப்பட்டது சிம்பா.
சிம்பா
கடந்த 2013ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி முதல் இதுவரை 250க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை வழக்குகளில் துப்பு துலக்க மோப்ப நாய் சிம்பா பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன் சிம்பாவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து, வேலூர் கால்நடை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு மருத்துவ பரிசோதனையில் சிம்பாவிற்கு கல்லீரல் புற்றுநோய் பாதிப்பு உள்ளது தெரிய வந்தது.
எஸ்பி நேரில் அஞ்சலி
இதையடுத்து சிம்பாவிற்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று காலை மோப்ப நாய் சிம்பா பரிதாபமாக உயிரிழந்தது. இதனை அடுத்து, மோப்ப நாய் சிம்பா காவல்துறை மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் வேலூர் மாவட்ட எஸ்.பி ராஜேஷ் கண்ணன் கலந்து கொண்டு மோப்ப நாய் சிம்பாவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மாவட்ட ஆயுதப்படை டிஎஸ்பி மனோகரன், ராமஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மோப்ப நாய்கள் அஞ்சலி
மேலும், மோப்ப நாயுடன் பணிபுரிந்த காவலர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சிம்பாவுடன் இருந்த சக மோப்ப நாய்கள் வீரவணக்கம் செலுத்திய பின்னர் மோப்ப நாய் பிரிவு உள் வளாகத்திலேயே சிம்பாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஏலகிரி மலையில் நடைபெறும் கோடை விழாவில் நாய்கள் கண்காட்சியில் சிம்பா முதல் பரிசு பெற்றது குறிப்பிடத்தக்கது.