வேலூரில் வெற்றி யாருக்கு.. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவக்கம்
Recommended Video
சென்னை: பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வேலூர் லோக்சபா தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின்றன.
கடந்த லோக்சபா பொதுத் தேர்தலின்போது வேலூருக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால், தொகுதிக்குள், பல கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து, தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதையடுத்து, தமிழகத்திலுள்ள 38 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. தேனியில் அதிமுகவும் பிற 37 தொகுதிகளிலும் திமுக கூட்டணி கட்சிகளும் வெற்றி பெற்றன.
மும்முனை போட்டி
இந்த நிலையில், வேலூர் லோக்சபா தொகுதிக்கு கடந்த 5ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டது. திமுக சார்பில் அதன் பொருளாளர் துரைமுருகன் மகன், கதிர் ஆனந்த், அதிமுக வேட்பாளராக புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் ஆகியோர் போட்டியிட்டனர். நாம் தமிழர் சார்பில் தீப லட்சுமி போட்டியிட்டார்.
71.51 சதவீதம் வாக்குப் பதிவு
கடந்த 5ம் தேதி, மொத்தம் 1,553 வாக்குச்சாவடி மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. இதில் மொத்தம் 71.51 சதவீதம் வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ளன. துணை ராணுவப்படையினர் மற்றும் தமிழக போலீசாரின் 3 அடுக்கு பாதுகாப்பில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.
தபால் ஓட்டுக்கள்
இதனிடையே, வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை பணியில் 375க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். காலை, 8.30 மணியளவில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் பணிகள் துவங்கும்.
விவிபேட் ஒப்பீடு
தேர்தல் முன்னணி நிலவரம் காலை 11 மணிக்கெல்லாம் தெரிய ஆரம்பித்துவிடும். வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு, ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் 5 வாக்குப்பதிவு மையங்கள், குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, விவிபேட்டில் எந்த சின்னத்துக்கு எத்தனை ஓட்டுகள் பதிவாகி உள்ளது என்பது கணக்கிடப்படும்.
உச்சநீதிமன்றம்
ஒருவேளை, வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுக்கும், விவிபேட்டில் பதிவான வாக்குகளுக்கும் இடையில் மாறுபாடு இருந்தால் விவிபேட்டில் பதிவான வாக்குகள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். லோக்சபா பொதுத் தேர்தலின்போது, எதிர்க்கட்சிகள் தொடர்ந்த வழக்கை விசாரித்து, உச்சநீதிமன்றம் இவ்வாறு விவிபேட் சரிபார்ப்பு, பணியை மேற்கொள்ள உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.