சீனுக்கு வந்த அய்யாக்கண்ணு.. "சீரியசான" போராட்டம்! அரசுக்கு எதிராக விவசாயிகளுடன் தொடர் உண்ணாவிரதம்
விழுப்புரம்: சாலை விரிவாக்க பணிக்காக எடுக்கப்பட்ட விவசாய நிலத்திற்கு ஒரு இடத்தில் இழப்பீடாக சதுர அடிக்கு ரூ.200 தொகையும் மற்றொரு இடத்தில் ரூ.2000 என பத்து மடங்கு வித்தியாசம் வைத்து ஏமாற்றுவதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு குற்றம்சாட்டியுள்ளார். விழுப்புரத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கும் அவர் இவ்வாறு கூறினார்.
கடந்த பாஜக ஆட்சியில் டெல்லிக்கு தமிழ்நாட்டை சேர்ந்த ஏராளமான விவசாயிகளை அழைத்துச் சென்று அரை நிர்வாண போராட்டம் என பல வகைகளில் போராட்டங்களை நடத்தி கவனத்தை ஈர்த்தவர் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு.
2019 தேர்தலில் பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசியில் விவசாயிகள் அனைவரும் போட்டியிடப்போவதாக அறிவித்து வேட்புமனுவை தாக்கல் செய்து பின்னர் போட்டியிடவில்லை என்று அறிவித்தார்.
உண்ணாவிரத போராட்டம்
இந்த நிலையில், இன்று விழுப்புரத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் விழுப்புரம் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைக்கு இடம் வழங்கிய விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி தொடர் பட்டினி போராட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்றது. இதில் பங்கேற்று சிறப்புரையாற்றிய அய்யாக்கண்ணு. அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
விழுப்புரம் - நாகை தேசிய நெடுஞ்சாலை
அப்போது பேசிய அவர், நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளாகியும் விவசாயிகள் வாழ்வாதாரம் உயராமல் இன்னும் அடிமையாகவே உள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் - நாகை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்காமல் ஏமாற்றப்பட்டு உள்ளனர்.
இழப்பீடு வழங்குவதில் பாரபட்சம்
நாகப்பட்டினம் பகுதியில் கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு ஒரு சதுர அடிக்கு ரூ.2000 வழங்கி உள்ளனர். ஆனால் இங்குள்ள விவசாயிகளுக்கு சதுர அடிக்கு ரூ.200 வழங்கி உள்ளனர். இழப்பீட்டில் பத்து மடங்கு வித்தியாசம் வைத்து விவசாயிகள் ஏமாற்றம் செய்யப்படுகின்றனர். தமிழகத்தில் விவசாய நிலங்கள் பல திட்டங்களுக்காக இவ்வாறு கையகப்படுத்தப்படுகின்றன.
அநியாய தொகை
அதனை விவசாயிகள் தர முடியாது என்று கூட சொல்ல முடியாது. இதனால் உரிய இழப்பீடாவது கேட்டு பெற போராடுகிறோம். இரட்டிப்புத் தொகை தருவதாக அறிவித்துவிட்டு அநியாய தொகையை நிர்ணயித்துக் கொடுக்கின்றனர். தேர்தல் நேரத்தில் விவசாயிகளை நாட்டின் முதுகெலும்பு என வர்ணிக்கின்றனர்.
தேர்தல் நாடகம்
தேர்தல் முடிந்த பிறகு அவர்களின் உரிமைகளையும் கோரிக்கைகளையும் இவர்கள் கேட்பதில்லை. அடிமையாகவே பயன்படுத்துகின்றனர். அன்று 90 ரூபாய் சம்பளம் வாங்கிய ஆசிரியர் இன்றைக்கு ஒரு லட்சம் வாங்குகிறார். ரூ.90 க்கு விற்ற ஒரு டன் கரும்பு இன்று ரூ.2000 க்கு தான் விற்கிறது. 250 ரூபாய் சம்பளம் பெற்ற எம்எல்ஏ இன்னைக்கு ஒரு லட்சம் சம்பளம் வாங்குகிறார்.
ஏமாற்றப்படும் விவசாயிகள்
அரசு ஊழியர்கள் முதல் வங்கி மேலாளர்கள் வரை ஐம்பதாயிரம், ஒரு லட்சம் சம்பளம் வாங்குகின்றனர். ஆனால் நாற்பது ரூபாய் இருந்து நெல் இன்றைக்கு அதிகபட்சமாக 1000 ரூபாய் தான் விற்கிறது. அன்று ஒரு பவுன் 3000 விற்றது இன்றைக்கு 45 ஆயிரம் உயர்ந்து உள்ளது. அன்றைக்கு 70 ரூபாய் விற்ற நெல் ஆயிரம் ரூபாய்க்கு தான் விற்கிறது. இவ்வாறு எல்லாவற்றுக்கும் விலைவாசி உயர்ந்த நிலையில் விவசாயிகள் மட்டும் ஏமாற்றப்படுகின்றனர்." என்றார்.