மீண்டும் கள்ளச்சாராய மரணம்.. மரக்காணம், கருணாபுரம் கண்டபிறகும் பாடம் கற்கவில்லையா? எடப்பாடி ஆவேசம்!
விழுப்புரம்: மரக்காணம், கருணாபுரம் கண்டபிறகும் முதல்வர் எந்தப் பாடமும் கற்றுக்கொள்ளவில்லை, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களின் சுவடு மறைவதற்குள் விழுப்புரத்தில் மற்றுமொரு கள்ளச்சாராய மரணம் நிகழ்ந்துள்ளது என எடப்பாடி பழனிசாமி காட்டமாக விமர்சித்துள்ளார்.
அண்மையில் கள்ளக்குறிசிச் மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்த 200க்கும் மேற்பட்டோர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் 65 பேர் பலியாகினர். இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அதன் சுவடு மறைவதற்குள் விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் குடித்த ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் அரசூர் அருகே உள்ள டி.குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஜெயராமன், முருகன் மற்றும் சிவச்சந்திரன். இவர்கள் மூவரும் சேர்ந்து கடந்த சனிக்கிழமை (ஜூன் 29) அன்று புதுச்சேரி மடுக்கரை பகுதியில் இருந்து பாக்கெட் சாராயம் வாங்கி வந்து குடித்ததாக கூறப்படுகிறது.
ஜெயராமன், முருகன் மற்றும் சிவச்சந்திரன் ஆகிய மூவருக்கும் திடீரென வயிற்று வலி மற்றும் எரிச்சல் ஏற்பட்டுது. இதனை அடுத்து, உடனடியாக அவர்களது உறவினர்கள் மூவரையும் அருகில் உள்ள இருவேல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முருகன் மற்றும் சிவச்சந்திரன் ஆகியோர் சற்று உடல் தேறிய நிலையில் பொது வார்டிற்கு மாற்றப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். ஜெயராமன் உடல்நிலை வெகுவாக பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில், ஜெயராமன் இன்று அதிகாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மீண்டும் கள்ளச்சாராய பலி நிகழ்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களின் சுவடு மறைவதற்குள் மற்றுமொரு கள்ளச்சாராய மரணம். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், ஒருவர் உயிரிழந்ததாக செய்திகள் வருகின்றன.
சம்மந்தப்பட்ட இடத்தில் கள்ளச்சாராயம் விற்கப்பட்ட காட்சிகளை ஊடகங்கள் வெளியிட்டு, அதிமுக சார்பில் சுட்டிக்காட்டிய பிறகும், இந்த விடியா திமுக அரசு அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காததன் விளைவாகவே இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணமும், கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரமும் கண்ட பிறகும் எந்த பாடமும் நீங்கள் கற்றுக்கொள்ளவில்லையா ஸ்டாலின் அவர்களே? உங்கள் விடியா அரசு கும்பகர்ண தூக்கத்தில் இருந்து விழிப்பதற்குள் இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோவது?
கள்ளச்சாராய மரணங்கள் தொடர்ந்து விழுப்புரம் சரகத்தில் நடைபெறுவதற்கு காரணமான நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications