பொங்கல் பரிசு தொகுப்போட.. பானையையும் இனிமே கொடுங்க.. இது யாரோட கோரிக்கைன்னு பாருங்க?
விழுப்புரம்: ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி,சர்க்கரை, முந்திரி பருப்பு உள்ளிட்டவை வழங்குவது போல் பொங்கல் பண்டிகைக்கு மண்பானைகளையும் வழங்க வேண்டும் என்று மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை கனையார், ஆத்தூர்,அரசூர், கிள்ளனூர், பரிக்கல் ,தென்மங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் மண்பாண்ட தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர். அவர்கள் ஆண்டுதோறும் ஏரியில் உள்ள களிமண்ணை பயன்படுத்தி பானைகள் செய்து வருகின்றனர்.
பொங்கல் மற்றும் கார்த்திகை மாதங்களில் ஒரு மாதத்திற்கு முன்பே பணிகளை அவர்கள் தொடங்கி விடுகின்றனர். வெளியில் வேலைக்கு சென்று வருவாய் ஈட்டினாலும், பரம்பரை தொழிலை அவர்கள் தொடர்ந்து வருகின்றனர். ஆனால் தற்போது பானைகளை தயாரிப்பதற்கான களிமண்ணை சேகரிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.
வருவாய்த்துறையினரும், காவல்துறையினரும் மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் பாதிப்பு நிலவுகிறது. இந் நிலையில், மண் அள்ள விதிக்கப் பட்டுள்ள கட்டுப்பாடுகளால் தொழில் முடக்கம் ஏற்பட்டுள்ளதாக மண்பாண்ட தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:
வெளியில் வேலைக்கு சென்றால் ஆயிரக்கணக்கில் பொருள் ஈட்டினாலும் பரம்பரை தொழிலைவிட மனமில்லை. குறைந்த வருமானம் வந்தாலும் மண்பாண்ட பொருட்கள் விற்பனை செய்கிறோம்.
எங்களின் வாழ்வாதரத்தை உயர்த்த அரசாங்கம் ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக அரசு பொது மக்களுக்கு அரிசி சர்க்கரை முந்திரி உள்ளிட்டவைகளை வாங்கி கொடுக்கிறது.
அது போல் அரசே மண் பானைகளை வாங்கி பொதுமக்களுக்கு நியாய விலை கடை மூலமாக வழங்கவேண்டும். மேலும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு அரசு வழங்கக் கூடிய மின்சக்கரம் கடன் உதவிகள் வழங்க வேண்டும் என்று கூறினர்.