பள்ளிகளில் சாதி பாகுபாடு.. ஆசிரியர்களே இப்படி செய்யலாமா? ஷாக்கோடு வருந்திய அமைச்சர் பொன்முடி..ஏன்?
விழுப்புரம்: தமிழகத்தில் ஒருசில பள்ளிகளில் இன்றும் சாதி பாகுபாடு இருப்பதாக எனக்கு புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. இளமையிலே குழந்தைகளுக்கு சமூக, சமுதாய, சகோதரத்துவ உணர்வை ஆசிரியர்கள் ஊட்ட வேண்டும். இது ஆசிரியர்களின் கடமையாகும். ஆனால் பலர் சாதிய உணர்வை வளர்க்கின்றனர்'' என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மேடையிலேயே வருத்தம் தெரிவித்தார்.
விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் மணற்கேணி ஆய்விதழ் சார்பில் சமத்துவத்தை ஊக்குவிக்கும் ஆசிரியர்களுக்கு
நிகரி விருதுகள் வழங்கும் விழா எம்பி துரை ரவிக்குமார் தலைமையில் நடைப்பெற்றது.
இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்று பாரி, தமிழரசி சற்குணம், அருணகிரி, செங்கொடி, ஜெயஸ்ரீ ரமேஷ் ஆகிய ஆசிரியர்களுக்கு நிகரி விருதுகளை வழங்கினார். பின்னர் அமைச்சர் பொன்முடி பேசியதாவது:

பள்ளி செல்ல வழி
அப்போதெல்லாம் அடித்தட்டு மக்கள் பள்ளிக்கு செல்லவும், கோவில்களுக்குள் நுழையவும் முடியாது என்ற நிலை இருந்தது. அதையெல்லாம் மாற்றி அனைவரும் கல்வி கற்க முடியும். கோவிலுக்குள் நுழைந்து தரிசனம் செய்ய முடியும் என்ற நிலையை ஏற்படுத்தியது திராவிட ஆட்சியில்தான்.

பள்ளிகளில் சாதிய பாகுபாடு
தமிழகத்தில் ஒருசில பள்ளிகளில் இன்றும் சாதி பாகுபாடு இருப்பதாக எனக்கு புகார்கள் வந்து கொண்டிருக்கிறது.
சாதி என்பது மக்களை ஒருங்கிணைப்பதற்காகவும் உருவாக்கப்பட்டது. வெறியூட்டுவதற்காக சாதி இருக்க கூடாது. இதனை தற்போது திராவிட மாடல் மாற்றி அமைத்து வருகிறது.

பாகுபாட்டை வளர்க்கும் ஆசிரியர்கள்
இளமையிலே குழந்தைகளுக்கு சமூக, சமுதாய, சகோதரத்துவ உணர்வை ஆசிரியர்கள் ஊட்ட வேண்டும். இது ஆசிரியர்களின் கடமையாகும். ஆனால் பலர் சாதிய உணர்வை வளர்க்கின்றனர். நாம் தமிழர்கள், மனிதர்கள் என்ற உணர்வு அனைவருக்கும் வர வேண்டும். மாணவர்களிடம் பழகும் வாய்ப்பு ஆசிரியர்களுக்கு கிடைக்கும். எனவே பள்ளி, கல்லுரி மாணவ-மாணவிகளிடம் ஆசிரியர்கள் சமத்துவ உணர்வை ஊட்ட வேண்டும்.

அனைவரும் அர்ச்சராகும் சட்டம்
முன்பு கோவிலுக்குள் சென்று தலித் மக்கள் தரிசனம் செய்ய இயலாத நிலை காணப்பட்டது. ஆனால், அனைத்து சாதியினரையும் அர்ச்சராக்கி சட்டம் கொண்டு வந்தவர் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி. அதுபோல, கிராமப்புற மற்றும் ஆதிதிராவிடர் பகுதிகளிலுள்ள கோவில்களில் திருப்பணி மேற்கொள்ள நிதி வழங்கியவர் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின்.

திராவிட ஆட்சி சாதனை இதுதான்
மதத்தால், கொள்கையால் நாம் வேறுபட்டிருக்கலாம். ஆனால், அனைவரும் மனிதநேயமிக்க மனிதர்களாக இருக்க வேண்டும். திராவிட ஆட்சியில் 50 ஆண்டு காலத்தில் தமிழகத்தில் என்ன செய்தது என்று கேட்கிறார்கள். இன்று அனைவரும் ஒற்றுமையாக இருப்பதே திராவிட ஆட்சியின் சாதனைதான். நீங்கள் எந்த கட்சியில் இருந்தாலும் தமிழ், இன, மொழி உணர்வு உங்களுக்கு இருக்க வேண்டும் என்றார். இதில் எம்.எல்.ஏ., புகழேந்தி, முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், முன்னாள் நகர சேர்மன் ஜனகராஜ், வி.சி.க., மாவட்ட செயலர் ஆற்றலரசு, ரவிகார்த்திகேயன் உள்ளிட்டவர் பலர் இருந்தனர்.












Click it and Unblock the Notifications