கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா : தாலி கட்டிக்கொண்டு ஆடிப்பாடிய திருநங்கைகள் - இன்று தேரோட்டம்
கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக திருநங்கைகள் தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்வு நேற்றிரவு நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி: கூவாகம் கூத்தாண்டவர் திருவிழாவில் பூசாரி கையால் தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில், வழக்கத்தைவிட குறைந்த எண்ணிக்கையில் திருநங்கைகளும் பக்தர்களும் பங்கேற்றனர்.
Recommended Video
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்துள்ள கூவாகம் கிராமத்தில் உள்ள உலக பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவிலில் ஆண்டுதோறும் மகாபாரதத்தை நினைவுறுத்தும் வகையில் நடைபெறும் 18 நாட்கள் சித்திரை திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக நடைபெறாமல் இருந்து வந்த நிலையில் இந்த ஆண்டு கடந்த 5ம் தேதி சாகைவார்த்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.
கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா - அரவாணை தரிசித்தால் தீராத நோய்கள் தீரும்
குவிந்த திருநங்கைகள்
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருநங்கைகள் கோவில் பூசாரி கைகளால் தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளைச் சேர்ந்த திருநங்கைகள் சமூக ஆர்வலர்கள் ஊடகவியலாளர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பிருந்தே விழுப்புரத்தில் தங்கியிருந்தனர்.
தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்
நேற்று மாலையில் மணப்பெண் அலங்காரத்தோடு வந்து கோவில் பூசாரி கைகளால் கூத்தாண்டவர் கடவுளை நினைத்து தாலி கட்டிக்கொண்டனர். தமிழகம், கேரளா, ஒரிசா, கர்நாடகா என பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த திருநங்கைகளும் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு கோவிலுக்கு வந்து தங்களின் இஷ்ட தெய்வமான அரவான் என்றழைக்கப்படும் கூத்தாண்டவரை வணங்கி பூசாரிகளின் தாலி கட்டிக்கொண்டு ஒருவரை ஒருவர் சந்தித்து பேசியும் கும்மியடித்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
மகாபாரத புராண கதை
திருநங்கைகள் தாலி கட்டிக்கொள்வதற்குப் பின்னால், புராணக் காரணங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. 'மகாபாரத குருஷேத்ர போரில், பாண்டவர்கள் வெற்றி பெற வேண்டும் என்றால், சகல லட்சணங்களும் பொருந்திய ஆண்மகன் ஒருவனை பலியிடவேண்டும் என்ற நிலை வருகிறது. அதற்கு, அர்ஜுனன் - நாக கன்னிகையின் புத்திரன் அரவான் முன்வருகிறான். ஆனால், திருமணமான ஒருவனைத்தான் பலிகொடுக்க முடியும் என்பது சாஸ்திரம். ஆகவே, அரவான் சிறிது நேரத்தில் பலி கொடுக்கப்பட்டுவிடுவான் என்பதினால் எந்தப் பெண்ணும் அவனைத் திருமணம் செய்துக்கொள்ள முன்வரவில்லை. ஸ்ரீ கிருஷ்ணர் மோகினி அவதாரம் எடுத்து அவனை மணந்துகொண்டார். எனவே, 'பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அம்சமானவர்களே திருநங்கைகள்' என்று சொல்லப்படுகிறது.
கூவாகம் தேரோட்டம்
அரவானின் திருக்கண் திறக்கப்படும் நாளில் அரவானை கணவனாக எண்ணிக்கொண்டு பூசாரி கைகளால் தாலிக் கட்டிக்கொள்கின்றனர் திருநங்கைகள். இன்று காலை கூத்தாண்டவர் தேர் பவனி நடைபெறுகிறது. அரவாண் களப்பலி முடிந்த உடன் திருநங்கைகள் தங்கள் தாலியை துறந்து வெள்ளை புடவை அணிந்து தங்கள் கைகளில் அணிந்திருந்த வளையல்களை பூசாரிகள் கையால் உடைத்து கண்ணீருடன் செல்லும் நிகழ்ச்சியும் நடைபெறும்.