பரபரத்த பிரஸ் மீட்.. ஆ.ராசா பற்றி கேள்வி.. பாதி பேட்டியில் வெளியேறிய மதுரை ஆதீனம்
விழுப்புரம்: திமுக எம்பி ஆ ராசா தொடர்பான கேள்விக்கு மதுரை ஆதீனம் பதில் அளிக்க மறுத்தார். மேலும், பத்திரிகையாளர்களை நோக்கி ‛‛வம்பில் இழுத்துவிட பார்க்குறீங்க'' என குற்றம்சாட்டிய நிலையில் வார்த்தைபோர் ஏற்பட்டது. இதையடுத்து மதுரை ஆதீனம் பத்திரிகையாளர் சந்திப்பை பாதியில் முடித்துவிட்டு சென்றார்.
திமுகவின் துணை பொதுச்செயலாளரும் எம்பியுமாக இருப்பவர் ஆ ராசா. சென்னை பெரியார் திடலில் நடந்த நிகழ்ச்சியில் ஆ ராசா இந்து மதம் பற்றி சில கருத்துகளை தெரிவித்தார்.
இதுதொடர்பாக வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பாஜக உள்பட பல்வேறு கட்சியினர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
தேவர், பள்ளர், பறையர் நிலம் பறித்து பிராமணருக்கு தந்த 'பொன்னியின் செல்வன்' ராஜராஜ சோழன்-ஆ.ராசா சூடு
ஆ ராசா பேச்சு
ஆ ராசா பேசிய வீடியோவில், ‛‛நீ பார்சியாக இல்லை என்றால் நீ இந்துவாகத்தான் இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சொல்கிறது. இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது உண்டா?. இந்துவாக இருக்கின்ற வரை நீ சூத்திரன்; சூத்திரனாக இருக்கின்ற வரை நீ விபச்சாரியின் மகன். இந்துவாக இருக்கின்ற வரை நீ பஞ்சமன்; இந்துவாக இருக்கின்ற வரை நீ தீண்டத்தகாதவன். எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? எத்தனை பேர் தீண்டத்தகாதவர்களாக இருக்க விரும்புகின்றீர்களா? என்ற கேள்வியை உரக்க எழுப்பினால்தான் அது சனாதனத்தை முறியடிக்கும் அடிநாதமாக அமையும்'' என்ற வகையில் பேசி இருந்தார்.
பாஜக போராட்டம்
இந்த பேச்சை கண்டித்து இந்து அமைப்பினர், பாஜகவினர் சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரை கைது செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு மத்தியில் ஆ ராசா தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க முடியாது என பேசும் இன்னொரு வீடியோ வெளியாகி உள்ளது. மேலும் பாஜக சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. வரும் 26ம் தேதியிலும் பாஜக சார்பில் அமைதிப்போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மதுரை ஆதீனம் பேட்டி
இந்நிலையில் தான் விழுப்புரத்தில் மதுரை ஆதீனம் ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினார். இந்த வேளையில் திமுக எம்பி ஆ ராசாவின் பேச்சு தொடர்பாக அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதாவது பத்திரிகையாளர் ஒருவர், ‛‛ஆ ராசா பேசிய பேச்சு ஒரு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்'' என கேள்வி கேட்டார். அதற்கு அவர் கருத்து சொல்ல விரும்பவில்லை எனும் வகையில் பதிலளித்தார்.
பதில் சொல்ல மறுத்த மதுரை ஆதீனம்
இதையடுத்து இன்னொரு பத்திரிகையாளர், ‛‛ஆ ராசா இந்துக்களை 2 விதமாக பிரித்துள்ளோம். அதில் நானும் இந்து தான்'' என கூறியுள்ளார். இதுபற்றி'' என கேள்வி கேட்டார். அதற்கும் அதற்கு கருத்து சொல்ல விரும்பவில்லை என மதுரை ஆதீனம் கூறினார். இதை தொடர்ந்து இன்னொரு பத்திரிகையளார், ‛‛நீங்கள் இந்து அமைப்பில் உள்ளீர்கள். ஆதீனமாக உள்ளீர்கள். இதில் கருத்து சொல்லுங்கள்'' எனக்கூறினார். அப்போது குறுக்கீட்ட மதுரை ஆதீனம், ‛‛நீங்கள் வம்பை விலை கொடுத்து வாங்குறீர்கள். நீங்கள் வம்பில் இழுத்துவிட பார்க்குறீங்க'' என கூறினார்.
பாதியில் வெளியேறிய ஆதீனம்
இதற்கு பத்திரிகையாளர், ‛‛நீங்கள் கூப்பிட்டதற்காக தான் நாங்கள் வந்தோம்'' என்றனர். அதற்கு ஆதீனம்‛‛ நான் கூப்பிட்டேனா?'' என பதில் கேள்வி கேட்டார். இதையடுத்து மதுரை ஆதீனம் மற்றும் அவரை சுற்றி இருந்தவர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் இடையே வார்த்தைப்போர் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பை பாதியில் முடித்து கொண்டு மதுரை ஆதீனம் வெளியேறினார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.