பதவியே இல்ல.. இது எதுக்கு? - ஓபிஎஸ் பெயர், படங்களை அழித்த தொண்டர்கள்.. அதுவும் ‘அவர்’ சொன்னதுமே!
விழுப்புரம் : விழுப்புரத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் படம் மற்றும் அவரது பெயரை சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் அழித்து வருவதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை மோதல் காரணமாக ஓபிஎஸ் - ஈபிஎஸ் இரு தரப்பாக பிரிந்துள்ளனர். நேற்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்திலும் பெரும் குழப்பங்கள் அரங்கேறின.
ஓபிஎஸ் அவமதிக்கப்பட்டதாக அவரது ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியானதாக சி.வி.சண்முகம் தெரிவித்த நிலையில், அவரது ஆதரவாளர்கள் ஓ.பி.எஸ் பெயரை அழித்து வருகின்றனர்.
3 பேருதான்.. அவங்களும் எந்தக் கட்சிக்கு போறாங்கனு தெரியல - ஓபிஎஸ்ஸை கிண்டல் செய்த சி.வி.சண்முகம்!
பொதுக்குழுவில் அவமதிப்பு
அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்ற ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென கூட்டத்தை புறக்கணித்து கிளம்பினார். ஓபிஎஸ் செல்லும்போது, அவருடைய வாகனத்தை ஈபிஎஸ் ஆதரவாளர்கள் பஞ்சர் ஆக்கியதாக கூறப்படுகிறது. மேலும், ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில்கள், காகிதங்களை வீசியதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து அதிமுகவில் உள்ள ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஓபிஎஸ்க்கு ஆதரவாகவும், எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம் தெரிவித்தும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
எடப்பாடிக்கு எதிர்ப்பு
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், எடப்பாடி பழனிசாமியின் உருவபொம்மையை எதிர்த்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக, அதிமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, அதிமுக கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டனர். இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள், ஓபிஎஸ் பெயரை அழித்து எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.
சி.வி.சண்முகம்
எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பிறகு இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 1ஆம் தேதியன்று செய்யப்பட்ட சட்டத் திருத்தங்களுக்கு, நேற்றைய அதிமுக பொதுக்குழுவில் அனுமதி பெறாததால், ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதாகவும், அதாவது அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகி விட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
ஓபிஎஸ் பெயர் அழிப்பு
இதையடுத்து, விழுப்புரத்தில் உள்ள அதிமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் இருந்த கட்சிப் பதாகைகள் மற்றும் அப்பகுதியில் சுவர் விளம்பரங்களில் இடம்பெற்றிருந்த ஓ.பன்னீர்செல்வம் புகைப்படம் மற்றும் அவரது பெயரை, சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் வெள்ளையடித்து, இன்று அழித்தனர். மேலும், ஓ.பி.எஸ்ஸுக்கு எதிரான முழக்கங்களையும் எழுப்பியுள்ளனர்.
படங்கள் அழிப்பு
நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் வகையில் நடந்த நேற்றைய அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தேர்தல் ஆணையத்திடம் இன்று மனு கொடுத்ததாக தகவல் வெளியான நிலையில், சி.வி.சண்முகம் ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகி விட்டதாகப் பேசிய சிறிது நேரத்திலேயே விழுப்புரத்தில் ஓ.பன்னீர்செல்வம் படம் மற்றும் அவரது பெயரை அழித்த சம்பவம், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.