என்னை குலச்சாமினு சொல்லிட்டு! என் முதுகில் குத்துகிறார் அன்புமணி! ராமதாஸ் கடும் குற்றச்சாட்டு
விழுப்புரம்: என்னை குலச்சாமி என சொல்லிவிட்டு, என் முதுகில் குத்துகிறார், என்னை அவமானப்படுத்துகிறார் என பாமக நிறுவனரும் தலைவருமான ராமதாஸ் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
திண்டிவனத்தை அடுத்த தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பாமக பிரச்சினைகள் ஊடகங்களுக்கு முழுமையாகத் தெரியவாய்ப்பில்லை. சமரசப் பேச்சுவார்த்தை நடத்த 2 ஆளுமைகள் தைலாபுரம் வந்தார்கள்.

நானும் சென்னை சென்றேன். ஆனால் பேச்சுவார்த்தை டிராவில் முடிந்துவிட்டது. எந்த முடிவும் ஏற்படவில்லை. நான் வீட்டின் கதவுகளை மூடிக் கொண்டு உள்ளேயே இருக்க வேண்டும். அன்புமணி மட்டும் மக்களை பார்க்க வேண்டும் என்கிறார்கள்.
என்னால் நியமிக்கப்பட்டவர்கள் எனக்கே பஞ்சாயத்து செய்வது என்பது எனது தலைவிதியாகும். தலைவர் பதவியை விட்டுத் தர நான் தயாராக இருந்தேன். ஆனால் பேச்சுவார்த்தைக்கு சென்ற ஜி.கே.மணியை சந்திக்க அன்புமணி மறுத்துவிட்டார்.
இதனால் எனக்கு கோபம் வந்து, நீயா, நானா என பார்த்துவிடுவோம் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். 46 ஆண்டுகளாக மக்களுடன் பழகி வருகிறேன். இன்னும் ஓரிரு ஆண்டுகள் தலைமை ஏற்க எனக்கு உரிமை இல்லையா? இப்படிக் கேட்பதே எனக்கு அவமானமாக இருக்கிறது.
நான் கட்டிய பாமக என்ற மாளிகையில் நான் குடியமர்த்திய நபரே என்னை கழுத்தை பிடித்து வெளியே தள்ளும் அளவுக்கு அவருடைய செயல்பாடுகள் உள்ளன. நான் அழைத்த கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர்களை வரவிடாமல் தடுத்து என்னை மானபங்கம் செய்துிவட்டார். அவர் அமைதி காத்திருந்தால் அதிகாரம் கைக்கு வந்திருக்கும்.
குருவுக்கு மிஞ்சிய சீடன் இருக்கலாம். தந்தைக்கு மிஞ்சிய தனயன் கூடாது. தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லைய இதுவே நீதி, தர்மம். என்னை குலசாமி என சொல்லிக் கொண்டே நெஞ்சில் குத்துகிறார். அவமானப்படுத்துகிறார், சிறுமைப்படுத்துகிறார். என் கை விரல் கொண்டே என் கண்ணை குத்திக் கொண்டேன்.
உயிருள்ள என்னை அன்புமணி உதாசீனம் செய்கிறார். உருவப்படத்தை வைத்து உற்சவம் நடத்துகிறார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குப் பிறகு, எந்தக் குடும்பத்து பெண்களும் அரசியலுக்கு வரவில்லை. விஜயகாந்த் மறைவுக்குப் பிறகுதான், பிரேமலதா வந்துள்ளார். சரியாக செயல்படாததால் சமூக நீதி பேரவைத் தலைவர் பொறுப்பிலிருந்து பாலு நீக்கப்பட்டார். சட்டப்பேரவைத் தேர்தல் வரை நான்தான் பாமகவுக்கு தலைவர்.
அன்புமணி யாரையும் சந்திக்க மாட்டார். ஆனால், தற்போது 'கூவிக்கூவி' அழைக்கிறார். அன்புமணியை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கமாட்டேன். தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கவில்லை. அதேநேரத்தில், பாமக நிறுவனர், தலைவர் இரண்டும் நான்தான். இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications