நீ காந்தி வம்சமா? “அந்த” சாதி தானே! - ஊராட்சி செயலாளர் மீது பட்டியலின ஊராட்சித் தலைவர் புகார்
விழுப்புரம்: சாதியைச் சொல்லி அவமானப்படுத்திய ஊராட்சி மன்ற செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட ஊராட்சிமன்ற தலைவர் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மோகன் அவர்களிடம் புகாரளித்துள்ளார்.
Recommended Video
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்துள்ள கிராண்டிபுரம் கிராமத்தின் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் அன்பழகன். அதே கிராமத்தில் ஊராட்சி செயலாளராக பணியாற்றி வருபவர் அரசு அதிகாரியான நாராயணன்.
இவர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் கிராம மக்களை தனியாக ஆட்களை வைத்து நியமனம் செய்வதும், நீக்குவதும், கணக்கெடுக்கும் பொறுப்பாளர்களை தனக்கு ஏற்றாற்போல் மாற்றிக் கொள்வதுமாக இருப்பதாக புகார் உள்ளது.
ஊராட்சி சார்ந்த செயல்பாடுகளில் நாராயணன் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகனை ஒதுக்கிவிட்டு தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பதாகவும் கூறப்படுகிறது. ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன் பட்டியலினத்தவர் என்பதனால் அவரை இழிவாக பேசி கிராமத்தில் எந்தவித முன்னேற்ற பணிகளையும் செய்ய விடாமல் வட்டார வளர்ச்சி அலுவலர்களோடு இணைந்து தடுத்து வருவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.
இந்த நிலையில், ஊராட்சி மன்ற செயலாளர் நாராயணன் தன்னை சாதி பெயரை சொல்லி இழிவுபடுத்தியதாக மாவட்ட ஆட்சியர் மோகனிடம் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன் புகாரளித்துள்ளார். அதில், "நீ என்ன காந்தி வம்சமா?, நீ இருளர் வம்சம் தானே என்று தன்னை சாதி பெயரைக் கொண்டு இழிவாக பேசி வரும் நாராயணன் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி கிராம மக்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த அன்பழகன் புகார் மனுவை அளித்தார்.