தவெக மாநாடுக்கு பதிலடி.. விழுப்புரம் செல்லும் உதயநிதிக்கு பிரமாண்ட வரவேற்பு..பொன்முடி கொடுத்த மெசேஜ்
விழுப்புரம்: தவெக நடத்திய விக்கிரவாண்டி மாநாடு அரசியல் ரீதியாக பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு கட்சிகளும் தவெக மற்றும் விஜய்யை விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் 5,6 தேதிகளில் விழுப்புரம் மாவட்டத்துக்கு செல்ல உள்ளார். அப்போது அவருக்கு தவெக மாநாட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வரவேற்பளிக்க திமுக திட்டமிட்டு வருகிறது.
நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் முதல் அரசியல் மாநாடு நடத்தியது. அந்த மாநாட்டில் பேசிய தவெக தலைவர் விஜய், பாஜக சித்தாந்த எதிரி என்றும் திமுக அரசியல் எதிரி என்றும் குறிப்பிட்டார்.

பாசிசம் குறித்து விஜய் பேசிய கருத்தும் சர்ச்சையானது. திமுக, பாஜக கட்சிகள் விஜய்க்கு எதிரான கருத்துகளை முன் வைத்து வருகின்றன. விசிக தலைவர் தொல். திருமாவளவனும் விஜய்க்கு எதிராக கருத்துகளை கூறியிருந்தார். கடந்த சில நாட்களாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் விஜய்யை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
ஒரு வாரத்துக்கு மேலாகியும் தவெக மற்றும் விஜய் குறித்த கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் அனல் பறந்து கொண்டிருக்கிறது. டிசம்பர் மாதம் நடைபெற உள்ள அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் திருமாவளவன் மற்றும் விஜய் கலந்து கொள்ள உள்ளனர்.
டிசம்பர் மாதம் முதலே விஜய் மண்டல வாரியாக விசிட் அடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவை தொடர்ந்து, விஜய்யும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று கூறியிருந்தார். விஜய்யின் அரசியல் உள்ளிட்டவற்றால் தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படும். 2026 தேர்தலில் கூட்டணி இல்லாமல் எந்தக் கட்சியும் ஆட்சியமைக்க முடியாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.
திமுகவும் விஜய் அரசியலை உன்னிப்பாக கவனித்து வருகிறது. மாநாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் இருந்து எவ்வளவு பேர் கலந்து கொண்டனர் என்று உளவுத்துறை மூலமாக தகவல் எடுத்தனர். விஜய்யை பெரிதாக கண்டுகொள்ள வேண்டாம். இருப்பினும் இளைஞர்களை விட்டுவிடக் கூடாது என திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பேசியிருந்தார்.
விஜய்க்கு எதிராக சீனியர் அமைச்சர்களும் கருத்து தெரிவித்திருந்தனர். தமிழக அரசியல் களம் விஜய் Vs உதய் என்று மாறும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறினர். இந்நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அரசு நிகழ்ச்சிக்காக வருகிற 5 மற்றும் 6 ம் தேதி விழுப்புரம் மாவட்டம் செல்ல உள்ளார்.
இதுகுறித்து திமுக ஆலோசனைக் கூட்டம் திண்டிவனத்தில் நடைபெற்றது. அதில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார். அப்போது பேசிய பொன்முடி, உதயநிதி வருகையின்போது ஆயிரக்கணக்கானோர் இணைந்து பிரமாண்ட வரவேற்பு கொடுக்க வேண்டும். அதற்காக தான் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. இங்கு சிறப்பான வரவேற்பு கொடுப்பது அவசியம்.
ஒரு வாரத்துக்கு முன்பு இங்கு என்ன நடந்தது, யார் வந்து சென்றார் உங்களுக்கு தெரியும். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பிரமாண்டமாக வரவேற்பு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். தவெக மற்றும் விஜய்யின் பெயரை குறிப்பிடாமல் உதயநிதி வருகையின்போது, அதற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று பொன்முடி தலைமையில் திமுக பணியாற்றி வருகிறது.












Click it and Unblock the Notifications