மேலும் 4 பேர்... தமிழகத்தில் அடுத்தடுத்து மின்னல் தாக்கி 11 பேர் பலி - தொடரும் சோகம்
விருதுநகர்: கனமழையின்போது மின்னல் தாக்கியதில் கட்டிடத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதன் மூலம் மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.
கருப்பசாமி நகர் பகுதியில் வீடு கட்டும் பணியில் அதே பகுதியை சேர்ந்த சூர்யா (22), ரேசல்பட்டியை சேர்ந்த கார்த்திக் (28), முருகன் (24), ஜக்கம்மாள் ஆகியோர் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில் அப்பகுதியில் இடி மின்னலுடன் திடீரென கனமழை கொட்டியது. அப்போது மின்னல் தாக்கியதில் கட்டிடப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 4 பேரும் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கோடை மழை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினாலும், இதுபோன்ற சோக நிகழ்வுகளும் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன.
சேலம் மாவட்டம் வாளசிராமணி என்ற கிராமத்தில் கிணறுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் பணியை செய்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த மின்வாரிய தொழிலாளர்களான பழனிவேல் மற்றும் விஜி மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியதில் ரப்சேல் (47) என்ற மீனவர்கள் உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் நிறைமதி கிராமத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஜெயக்கொடி என்பவரும் தென்கீரனூர் பகுதியில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த பண்ருட்டி கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரும் மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதேபோல், விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே வயலில் வேலை பார்த்துக்கொண்டிருந்த கருப்பாயி (44) என்ற பெண் தொழிலாளியும் மின்னல் தாக்கியதில் உயிரிழந்தார். அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே மாராக்குறிச்சி கிராமத்தில் வயல்வெளியில் மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்த அன்னலட்சுமி (35) என்பவர் மீது மின்னல் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதேபோல் மின்னல் தாக்கியதில் காயமடைந்த சிலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.












Click it and Unblock the Notifications