கொட்டும் கனமழை..ஓடைகளில் பெருக்கெடுத்த வெள்ளம்..சதுரகிரி மலையேற தடை விதித்த வனத்துறை
விருதுநகர்: தொடர் கனமழை பெய்வதால் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது. ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் வளர்பிறை பிரதோஷம் முதல் ஐப்பசி பவுர்ணமி வரை பக்தர்கள் சதுரகிரி செல்ல அனுமதியில்லை என வனத்துறையினர் அறிவித்துள்ளதால் பக்தர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது சதுரகிரி மலை. இது புகழ்பெற்ற ஆன்மிக தலமாகும். இந்த மலையில் ஏறுவதற்கு ஏதுவாக முதல் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. மலையேறும் பக்தர்கள் கரடு முரடான பாறைகளையும், பள்ளத்தாக்குகளையும், நீரோடைகளையும் கடந்து சென்று சிவபெருமானை தரிசிக்க வேண்டும்.
நான்கு வேதங்களே சிவகிரி, விஷ்ணுகிரி, பிரம்மகிரி, சித்தர்கிரி என்ற பெயர்களில் மலைகளாகி நிற்க, அவற்றின் நடுவில் கம்பீரமாக அமைந்திருக்கிறது, சஞ்சீவிகிரி. இம்மலையே சதுரகிரி என்றனர் முன்னோர்கள். மூலிகைகள் நிரம்பிய மலையின் மேல் சிவபெருமான் வீற்றிருக்கிறார்.
கொட்டும் கனமழை..ஓடைகளில் பெருக்கெடுத்த வெள்ளம்..சதுரகிரி மலையேற தடை விதித்த வனத்துறை
சுந்தரமகாலிங்கம்
சதுரகிரியை அகஸ்தியர் உள்ளிட்ட சித்தர்கள், இந்த மகாலிங்க மலையை சித்தர்கள் வாழும் பூமி என்கின்றனர். இங்கு சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம், இரட்டை லிங்கம், பிளாவடி கருப்பசாமி உள்ளிட்ட பல கோவில்கள் காணப்படுகின்றன. இவற்றை தரிசிக்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
பக்தர்கள் தரிசனம்
சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 4 நாட்கள் என மாதத்திற்கு 8 நாட்கள் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்படுவது வழக்கம். புரட்டாசி மாதத்தில் நவராத்திரி வரை பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்தனர். கடந்த சில வாரங்களாகவே கனமழை பெய்து வருவதால் நீரோடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தீபாவளி, ஐப்பசி அமாவாசை நாளில் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது.
கனமழை வெள்ளம்
வடகிழக்குப்பருவழை தீவிரமடைந்துள்ளதால் சதுரகிரி மலைப்பகுதிகளில் உள்ள ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது. மலையேறும் பக்தர்கள் சங்கிலிப்பாறை, வழுக்குப்பாறை ஓடைகளை கடந்துதான் மலையேற வேண்டும். எனவே வெள்ள நீர் பெருக்கெடுத்துள்ளதால் சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
ஐப்பசி பவுர்ணமி
இந்த வாரம் சனிக்கிழமை வளர்பிறை பிரதோஷமாகும். பொதுவாக சனி பிரதோஷம் மகா பிரதோஷமாக கடைபிடிக்கப்படுகிறது. ஐப்பசி பவுர்ணமி நாளில் சிவ ஆலயங்களில் அன்னாபிஷேகமும் நடைபெறும். நவம்பர் 5ஆம் தேதி முதல் நவம்பர் 09ஆம் தேதி வரைக்கும் சதுரகிரி செல்ல வனத்துறை தடை விதித்துள்ளதால் பக்தர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு வர வேண்டாம் எனவும் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.