அன்புமணி போட்ட கூட்டணி பிளான்!போட்டு உடைத்த திலகபாமா! வன்னியர்+தேவேந்திரர் = ஆட்சி.. இதென்ன கணக்கு?
விருதுநகர் : பாமக, அதிமுகவோடு கூட்டணியில் இருக்குமா? திமுக பக்கம் செல்லுமா என்ற கேள்விகள் வலுவாக எழுந்து வரும் நிலையில், அதற்கு விடையளிப்பது போல அமைந்துள்ளது புதிய தமிழகம் கட்சியின் மாநாட்டில் பாமக பொருளாளர் திலகபாமாவின் பேச்சு.
அன்புமணி ராமதாஸுக்குப் பதிலாக, இந்த மாநாட்டில் பங்கேற்ற திலகபாமா, அன்புமணி சொன்னதாக ஒரு செய்தியைக் கூறியுள்ளார்.
வன்னியரும், தேவேந்திரரும் இணைந்தால் தான் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும் என்பதைச் சொல்லி வாருங்கள் என்று என்னை அனுப்பினார் அன்புமணி எனப் பேசியுள்ளார் திலகபாமா.
இந்த மாநாட்டில், அதிமுக, பாஜக உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற நிலையில், இது அதிமுக கூட்டணியை உறுதி செய்யும் மாநாடாகவே அமைந்துள்ளது.
2024 நாடாளுமன்ற தேர்தலில் பாமக யாருடன் கூட்டணி? சட்டென வந்து விழுந்த கேள்வி.. ராமதாஸ் சொன்ன பதில்!
புதிய தமிழகம் மாநாடு
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அழகாபுரியில் புதிய தமிழகம் கட்சியின் வெள்ளி விழா மாநாடு நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் நத்தம் விஸ்வநாதன், முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜு, இன்பத்தமிழன் பாஜக மாநில துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம், பாஜக மாநில செயலாளர் பொன் பாலகணபதி, பாமக மாநில பொருளாளர் திலகபாமா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கூட்டணி அச்சாரம்
மேலும், பல கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். ஆனால், திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் தலைவர்கள் யாரும் இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை. பாஜக கூட்டணியை உறுதி செய்யும் வகையிலேயே இந்த மாநாடு நடத்தப்பட்டதாக கூறப்பட்டாலும், எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் பங்கேற்றிருந்தாலும், ஓபிஎஸ் அணியைச் சேர்ந்தவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை.
பாஜக + ஈபிஎஸ்
எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே கிருஷ்ணசாமி செயல்பட்டு வருகிறார். ஓபிஎஸ்ஸுக்கு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை வழங்கப்பட்டதைக் கண்டித்து ஈபிஎஸ் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு சென்று ஆதரவு கொடுத்தார் கிருஷ்ணசாமி. அதேபோல, தொடர்ச்சியாக, திமுக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுத்து வருகிறார். பாஜகவுடனும் நெருக்கம் காட்டி வருகிறார். இதன்மூலம், பாஜக + எடப்பாடி பழனிசாமி கூட்டணியில் கிருஷ்ணசாமி இணைவது உறுதியாகிவிட்டது என்கிறார்கள்.
தமிழன் + இந்து
இந்த மாநாட்டில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி பேசுகையில், தமிழகம் தற்போது சித்தாந்த அச்சுறுத்தலில் உள்ளது. சாதி மோதலை விட்டுவிட்டு அனைத்து சமுதாய மக்களை ஒன்றிணைத்து செயல்பட வேண்டும். அதற்கு அனைத்து சமுதாயத்தின் ஒற்றுமை அவசியம். இனி யாரையும், எந்த சமுதாயத்தையும் பகையாகப் பார்க்கக் கூடாது. நாம் அனைவரும் தமிழன், இந்து என ஒன்றிணைய வேண்டும். நான் நமது நட்பு சக்திகளை உங்களுக்கு அடையாளம் காட்டி உள்ளேன். அவர்களோடு இணைந்து இனி வரும் தேர்தல்களை நாம் சந்திக்க வேண்டும் என்றார்.
திலகபாமா ரூட்
இந்த மாநாட்டில் பாமக சார்பில் பங்கேற்ற அக்கட்சியின் பொருளாளர் திலகபாமா பேசுகையில், "வடக்கே வன்னியரும், தெற்கே தேவேந்திரரும் சேர்ந்து தமிழ்நாட்டை ஆட்சி செய்ய வேண்டும் என்று பேசிய பாமக நிறுவனர் ராமதாஸின் அடையாளமாக இங்கு நான் நிற்கிறேன். தேவேந்திர குல வேளாளர்கள் மறக்க முடியாத சம்பவம் கொடியங்குளம் கலவரம். காவல்துறை அடக்குமுறையைக் கண்டித்து ராமதாஸ் ஓடோடி வந்தார். இந்த மண்ணோடும், நீரோடும் தொடர்புடைய உறவுகளுக்காக ஓடி வந்தார்.
வன்னியரும், தேவேந்திரரும் இணைந்தால்
அன்புமணி ராமதாஸ் என்னை அழைத்து, புதிய தமிழகம் கட்சியின் பொன்விழா மாநாட்டுக்கு கிருஷ்ணசாமி அழைப்பு விடுத்திருக்கிறார், நான் டெல்லி செல்ல வேண்டி இருப்பதால் என்னால் அந்த மாநாட்டில் கலந்து கொள்ள முடியாது, நீங்கள் செல்லுங்கள், வன்னியரும், தேவேந்திரரும் இணைந்தால் தான் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும் என்பதைச் சொல்லி வாருங்கள் என்று என்னை அனுப்பினார்" எனப் பேசினார்.
இட ஒதுக்கீட்டை விட்டுக் கொடுக்காதீர்கள்
மேலும் பேசிய திலகபாமா, "பட்டியல் இனத்தில் இருந்து தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினரை நீக்குங்கள், எங்களுக்கு நீங்கள் பிச்சை போட வேண்டாம் எனக் கூறியதை உங்கள் காலடியில் விழுந்து வரவேற்கிறேன். இட ஒதுக்கீடு சலுகை இல்லை, நம் உரிமை. கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு தர வேண்டியது அரசாங்கத்தின் கடமை, அதைப் பெறுவது நம் உரிமை. இட பங்கீட்டு உரிமையை எந்தக் காலத்திலும் விட்டுக் கொடுக்காதீர்கள்" எனக் கேட்டுக்கொண்டார்.
10 சதவீத இட ஒதுக்கீடு தேவை
தேவேந்திரகுல வேளாளர்களை, பட்டியல் இனத்தவரிலிருந்து விடுவித்து தமிழகத்தில் தனிப்பட்டியலிலும், மத்திய அரசில் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவிலும் சேர்த்து மக்கள் தொகைக்கு ஏற்ப 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. அந்தவகையில், பாமகவின் தொடர் குரலான இட ஒதுக்கீட்டை கிருஷ்ணசாமி தற்போது வலியுறுத்தி இருக்கிறார்.
பாமக கூட்டணி உறுதி
அன்புமணி தன்னிடம் கூறியதாக திலகபாமா பேசியதும், "வன்னியர் + தேவேந்திரர்" இணைந்தால் ஆட்சி அதிகாரம் நமக்குத்தான் எனப் பேசியிருப்பதும், கிருஷ்ணசாமி இருக்கும் அணியிலேயே பாமக இடம்பெற விரும்புவதைக் காட்டுகிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். அப்படி என்றால், கிருஷ்ணசாமி இடம்பெற இருக்கும் பாஜக + அதிமுக கூட்டணியில் பாமகவும் இடம்பெறும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது அரசியல் அரங்கில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
2026 கணக்கு?
2026ல் பாமக தலைமையில் தமிழ்நாட்டில் ஆட்சி அமையும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசி வருகிறார். அதிமுக, திமுக என இரு பிரதான கட்சிகளுடனும் கூட்டணி அமைக்காமல், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் வியூகத்தில் அன்புமணி ராமதாஸ் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதற்கான அச்சாரமாகவும் இந்த மாநாட்டை பாமகவின் திலகபாமா பயன்படுத்தி இருக்கலாம் என்கிறார்கள்.