கீழடியில் அருங்காட்சியகம்! 2022 டிசம்பருக்குள் முதல்வர் திறந்து வைப்பார்! தங்கம் தென்னரசு உறுதி!
விருதுநகர்: கீழடி அருங்காட்சியக கட்டிடப்பணி நிறைவு பெறும் தருவாயில் இருப்பதால் இந்த ஆண்டு இறுதிக்குள் அதனை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைப்பார் என அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதியளித்துள்ளார்.
கீழடி அகழாய்வு அறிவியல்ரீதியாக சரியான இடத் தில் நடைபெற்றதால் தான் 11ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது;
பாட்டாவே பாடிட்டாரே! அழகர் மலை அழகா? இந்த சிலை அழகா? கீழடி சிற்பம் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு
பணிகள் நிறைவு
''கீழடியில் நடைபெற்ற அகழாய்வு முழுவதும் அறிவியல் சார்ந்த ஆராய்ச்சி முடிவுகளின் அடிப்படை நடைபெற்றுள்ளது. கீழடியில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு வரும் நிலையில் அதன் கட்டிட பணிகள் 98 சதவீதம் நிறைவுபெற்றுவிட்டது. பொருட்களை தேர்வு செய்வது, விளக்க உரைகள், ஒலி, ஒளி அமைப்புகள் எவ்வாறு இருக்க வேண்டும் என ஆய்வு செய்யப்படுகிறது.''
தவறான தகவல்
''இந்தப் பணிகளும் விரைவில் முடிந்துவிடும் என்பதால், இந்த ஆண்டு இறுதிக்குள் முதல்வர் ஸ்டாலினால் கீழடியில் அருங்காட்சியகம் திறந்து வைக்கப்படும். கீழடி அகழாய்வு பணிகள் சரியான இடத்தில் நடைபெறவில்லை என்பது தவறான தகவல். கீழடியில் 2017 முதல் 2021 வரை ஒன்றிய அரசின் தொல்லியல் துறை மூலம் 3 கட்ட அகழாய்வு பணிகள் நடந்தது.''
கீழடி அகழாய்வு
கீழடியில் நடைபெற்ற அகழாய்வுகள் மூலம் கூரை வீடுகள் கொண்ட சமுதாயம் இருந்ததற்கான ஓடுகள், தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளன. மேலும், கார்பன் பகுப்பாய்வில் கீழடி நாகரிகம் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பாக 580 ஆண்டுகள், அதாவது கிமு என்கின்றன. சங்ககாலம் என்பது கிமு 6ம் நூற்றாண்டில் இருந்ததற்கான கருத்தும், சங்க காலத்தில் எழுத்தறிவு பெற்ற நகர நாகரிகம் இருந்ததும் உறுதியாகி உள்ளது.''
11 ஆயிரம் பொருட்கள்
''கீழடியில் ஏறத்தாழ 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொல்லியல் பொருட்கள் கிடைத்துள்ளன.'' இவ்வாறு தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். கீழடியில் அருங்காட்சியகம் திறக்கப்பட்டால் அதனை காண ஏராளமானோர் அந்தக் கிராமத்திற்கு நாள்தோறும் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.