இந்தியாவிலேயே தமிழகம் தான் நம்பர் 1..மத்திய அரசு தடுப்பூசி தருவதில்லை! அமைச்சர் மா.சு குற்றச்சாட்டு!
விருதுநகர் : மருத்துவ சேவையில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது என்றும், ஆனால் மத்திய அரசு 2,3 மாதங்களாக தடுப்பூசிகளை வழங்கவில்லை என தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
விருதுநகரில் சுமார்168 கோடி மதிப்பீட்டில் சுமார் 500 படுக்கைகள் கொண்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. புதிய மருத்துவமனையின் கட்டிட பணிகள் முடிவடைந்த நிலையில் அந்த கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் , அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர் .ராமச்சந்திரன், அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் குத்து விளக்கு ஏற்றினார்கள்.

மா.சுப்பிரமணியன்
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்," தமிழகத்தை பொறுத்த வரையில் மருத்துவ கட்டமைப்பு மிக சிறந்த இடத்தில் இருப்பதால் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 10க்கு மேற்பட்ட விருதுகளை மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கி உள்ளது. 10க்கும் மேற்பட்ட விருதுகள் என்பது அனைவருக்குமான மருத்துவ சேவையில் இந்தியாவிலேயே தமிழகம் முதல் இடத்தில் இருக்கிறது.

தமிழகம் முதலிடம்
கர்ப்பிணி பெண்களுக்கு மஞ்சள் காமாலை கண்டறிவதில் தமிழகம் முதல் இடத்தில் இருக்கிறது. கருத்தடை சாதனங்கள் பொருத்துவதில் தமிழகம் முதல் இடத்தில் இருந்து கொண்டு இருக்கிறது. சுகப் பிரசவம் என்ற நிலையில் தமிழகம் எடுத்த முன்னெடுப்பு அதிலும் தமிழகம் முதலிடத்தில் இருந்து கொண்டிருக்கிறது. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் செயல்பாட்டின் மூலம் சிறப்புத் திட்டசெயல்பாட்டில் தமிழகம் முதல் இடத்தில் இருக்கிறது. இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டத்தின் மூலம் தமிழகத்தில் விபத்துகள் குறைந்து ஒரு லட்சத்து 35 ஆயிரம் உயிர்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் காப்பாற்றப்பட்டு இருக்கிறது

சிறப்பு துறைகள்
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்பிரமணியன்,"விருதுநகர் மாவட்டத்தில் தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி பல்வேறு புதிய மருத்துவ கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்ட வசதிகள் மக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. விருதுநகரில் 168 கோடி மதிப்பீட்டில் 500 படுக்கை உள்ள 6 மாடி கட்டிடம் இன்று மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டு உள்ளது. அதில் 12 வகையான சிறப்பு துறைகள் உருவாக்கப்பட்டு உள்ளன என்றார்.

708 புதிய மருத்துவ மனைகள்
தமிழகத்தில் நகர்ப்புற நல வாழ்வு மையங்கள் மூலம் 708 புதிய மருத்துவ மனைகள் தொடங்கப்பட உள்ளன.21 மாநகராட்சிகளிலும் 63 நகராட்சி களிலும் மருத்துவமனையில் கட்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது
இந்த மருத்துவமனையில் கட்டிடப் பணிகள் முடிந்து இந்த மாத இறுதியில் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் தமிழக முதல்வர் திறந்து வைக்க உள்ளார். மேலும் 708 மருத்துவமனைகளுக்கு தேவையான மருத்துவர்கள் சுகாதார ஆய்வாளர்கள் மருந்தாளுனர்கள் உதவியாளர்கள் என பணிகளுக்கு நியமனம் செய்ய அரசானை வெளியிடப்பட்டிருக்கிறது

தடுப்பூசி
இரண்டு மூன்று மாதங்களாக கொரோனா தடுப்பூசியை மத்திய அரசால் வழங்கபடவில்லை. கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் பணியும் தற்போது நிறுத்தப்பட்டு விட்டது. மேலும் தமிழகத்தில் 3 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. புதிய கொரோனா தடுப்பு மருந்தான மூக்கு வழியே செலுத்தும் மருந்தை தமிழக அரசு மருத்துவமனைகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications