2018-ஐ அலறவிட்ட "ஆடியோ".. மாணவிகளை மூளை சலவை செய்ய முயன்ற நிர்மலா தேவி!
விருதுநகர்: 2018 ம் ஆண்டில் நடந்த முக்கிய சம்பவங்களில் ஒன்றாக பார்க்கப்படுவது மாணவிகளை மூளை சலவை செய்த நிர்மலா தேவி வழக்கு.
கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி நடந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தை அதிர வைத்தது ஒரு ஆடியோ. கல்லூரி மாணவிகளை போன் மூலம் தொடர்புக்கொண்டு தவறான பாதைக்கு அழைத்ததாக எழுந்த புகாரில் அருப்புக்கோட்டை கல்லூரி உதவி பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். பின்னர் நீண்ட விசாரணைக்கு பிறகு அவர், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கல்லூரி மாணவிகளை, மூளைச்சலவை செய்யும் ஆடியோ, சமூக வலைதளங்களில் வைரலானது, தொலைக்காட்சிகளிலும் ஒளிப்பரப்பபட்டு பரபரபானது.
சந்தேகம் எழுந்தது
அந்த ஆடியோவில், ஆளுநருக்கு அடுத்த லெவலில் உள்ள முக்கியமான விஐபிக்களுக்கு நீங்கள் தேவை, அதனால் தான் பேசுகிறேன். இதனால், உங்கள் வாழ்க்கையே மாறும் என்று கல்லூரி மாணவிகளிடம் ஆசை வார்த்தை காட்டி இருந்தார் பேராசிரியை நிர்மலா தேவி. இவ்விவகாரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மீதும் சந்தேகம் எழுந்தது.
ஆளுநர் மாளிகை விளக்கம்
உடனடியாக இவ்விவகாரம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட ஆளுநர் மாளிகை, ஆடியோ விவகாரத்தில் குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பித்து விடக்கூடாது என்றும் வேந்தர் என்ற முறையில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
சி.பி.சி.ஐ.டி விசாரணை
தமிழகத்தை அதிர வைத்த இச்சம்பவம் தொடர்பாக, கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி நிர்மலா தேவியை 4 நாட்கள் காவலில் எடுத்த சி.பி.சி.ஐ.டி போலீசார், விருதுநகர் அலுவலகத்தில் வைத்து விசாரணையை தொடங்கினர்.
மேலும் இருவர் கைது
நிர்மலா தேவியிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், காமராஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி, உதவிப்பேராசிரியர் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இதனைதொடர்ந்து, கடந்த மே மாதம் 16ஆம் தேதி முதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ்வரி உத்தரவின் பேரில், டி.எஸ்.பி. முத்து சங்கரலிங்கம் தலைமையிலான சி.பி.சி.ஐ.டி போலீஸார் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் விசாரணையைத் தொடங்கினர்.
வாக்குமூலம்
இந்த விசாரணையில், பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மு.வ. அரங்கத்தில் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள் என 86 பேர் விசாரிக்கப்பட்டனர். இதனிடையே, சி.பி.சி.ஐ.டி போலீசாரிடம் பேராசிரியை நிர்மலா தேவி அளித்த வாக்குமூலத்தில், தனக்கும், பேராசிரியர் முருகனுக்கு தொடர்பு ஏற்பட்டதையும், தனது குடும்பத்தில் ஏற்பட்ட சிக்கல் குறித்தும் விளக்கினார். குறிப்பாக, 2 வது சந்திப்பிலேயே, முருகனுடன் தனது வீட்டில் உல்லாசமாக இருந்ததை கூறியதாக தகவல் வெளியானது.
அதுமட்டுமின்றி, உங்கள் சொல்படி கேட்டு ஒத்துழைப்பு கொடுக்கின்ற கல்லூரி மாணவிகள் யாராவது இருக்கின்றார்களா என்றும் நிர்மலா தேவியிடம் உதவிப்பேராசிரியர் முருகன் கேட்டுள்ளார். இப்படியான அதிர்ச்சி தகவல்களை சி.பி.சி.ஐ.டியிடம் வாக்குமூலத்தில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஜாமீன் மனு தள்ளுபடி
நிர்மலதேவி, உதவிப்பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவன் கருப்பசாமி ஆகியோர் மீதான வழக்கு, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனைதொடர்ந்து, டிசம்பர் 20 ஆம் தேதி, பலத்த போலீஸ் பாதுகாப்புடன், நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர், ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் வழக்கு விசாரணையை, 2019ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
கணவனை பார்க்க வேண்டும்
நீதிமன்ற வளாகத்தில் நக்கீரன் செய்தியாளரிடம் பேசிய நிர்மலா தேவி, தன்னுடைய கணவர், அண்ணன் ஆகியோரை சந்தித்து நடந்ததை விளக்க வேண்டும் என்றும், வழக்கில் என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை என்றார். ஆடியோவை கேட்டு தனது கணவர் விவாகரத்திற்கு விண்ணப்பித்து இருப்பார். அவருக்கு மெசேஜ் அனுப்பி வரச்சொல்லுங்கள். இதுவரை தன்னை குடும்பத்தினர் யாரும் வந்து சந்திக்கவில்லை. உடல்நிலையும் சரியில்லை என்று கூறினார். இதையடுத்து, 3 பேரும் பலத்த பாதுகாப்புடன் மதுரை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.