ஆடிப்பூரம் நாளில் ஆண்டாள் கோவில் தேரோட்டம்..விருதுநகர் மாவட்டத்திற்கு ஆக. 1ல் உள்ளூர் விடுமுறை
விருதுநகர்: ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தேரோட்டம் நடைபெறுவதால் விருதுநகர் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 1 ஆம் தேதியன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் மேகநாதரெட்டி அறிவித்துள்ளார்.
ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தில் துளசி நந்தவனத்தில் அவதரித்தவர் ஆண்டாள். ஆண்டாளின் அவதார தினம் ஆண்டுதோறும் ஸ்ரீவில்லிபுத்தூரில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் ஆண்டாள் ரங்கமன்னாருடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஆடி அமாவாசை தினமான இன்றைய தினம் கருட சேவை நடக்கிறது. 30ம் தேதி ஆண்டாள் சயன சேவையும் நடக்கிறது. விழாவின் முக்கிய அம்சமான ஆடிபூரம் தினமான ஆகஸ்ட் 1ஆம் தேதியன்று தேர் திருவிழா நடைபெற உள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றுபரவலை தடுக்கும் வகையில் திருவிழா நடைபெறவில்லை. உள் பிரகாரத்தில் சிறிய அளவில் ரத உற்சவம் நடைபெற்றது. 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு தேர் திருவிழா நடைபெறுவதால் தேரோட்டத்தை சிறப்பாக நடத்த ஆண்டாள் கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டத்தையொட்டி ஆகஸ்ட் 1ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி அறிவித்துள்ளார். விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக ஆகஸ்ட் 13ஆம் தேதி பணி நாளாக செயல்படுத்தப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
திருமணமாகாத பெண்கள் ஆடிப்பூரம் தினத்தில் ஆண்டாளை விரதம் இருந்து வணங்கினால் அவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கையாகும். ஆடிப்பூரம் நாளில் தேரோட்டத்தைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இதே போல ஆடிப்பூரம் தினமான ஆகஸ்ட் 1ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூரம் திருவிழா வருகிற 1ஆம் தேதி திங்கட்கிழமை அன்று நடைபெற உள்ளது. இதையொட்டி அன்று செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உள்ளுர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளுர் விடுமுறை நாளை ஈடுசெய்ய வருகிற 13ஆம் தேதி சனிக்கிழமை) அன்று பணிநாளாக அறிவிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.