'நவீன இந்திய வரலாற்றின் இருண்ட ஆண்டு 1984’ அமெரிக்க செனட் சபை உறுப்பினர் உருக்கம்!
வாஷிங்டன்: நவீன இந்திய வரலாற்றில் சீக்கியர்களுக்கு எதிராக கடந்த 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரம் தான் இந்தியாவின் இருண்ட ஆண்டுகளில் ஒன்று என அமெரிக்க செனட் சபை உறுப்பினர் பட் டூமி தெரிவித்தார்.
கடந்த 1984-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமராக இருந்த இந்திரா காந்தி, சீக்கிய பயங்கரவாதிகளை ஒடுக்க ஆபரேஷன் ப்ளூ ஸ்டாரை தொடங்கினார்.
1984-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1 முதல் 8-ஆம் தேதி வரை இந்த ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் அமல்படுத்தப்பட்டது.

ரத்தக் களரியான கோவில்
அமிர்தசரஸ் நகரிலுள்ள சீக்கியர்களின் புனிதஸ்தலமான பொற்கோவிலில் பதுங்கியிருந்து பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட, சீக்கிய பயங்கரவாதியான ஜர்னைல் சிங் பிந்த்ரான்வாலே மற்றும் அவரது கூட்டாளிகளை ஒடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவர்களை அந்த கோவிலில் வைத்தே ராணுவம் கொன்று குவித்தது. இதனால் அந்த கோவில் ரத்தக் களரியானது. கோயில் வளாகத்தில் எடுக்கப்பட்ட ராணுவ நடவடிக்கை, உலகளவில் சீக்கியர்களால் விமர்சிக்கப்பட்டது.

சீக்கியர்கள் என்பதால்
இதனால் அவர்கள் சீக்கிய மதத்தின் மீதான தாக்குதல் என்று இதை கருதினர். இதையடுத்து சுமார் 4 மாதங்களுக்கு பிறகு அக்டோபர் 31-ஆம் தேதி இந்திரா காந்தியை அவரது இரண்டு சீக்கிய மெய்க்காப்பாளர்களான சத்வந்த் சிங் மற்றும் பீந்த் சிங் ஆகியோர் சுட்டுக்கொன்றனர். இந்திரா காந்தியை சுட்டுக்கொன்றது சீக்கியர்கள் என்பதால் அப்போதைய காங்கிரஸ் நிர்வாகிகள், காங்கிரஸ் ஆதரவாளர்கள் தங்களது முழு கோபத்தையும் சீக்கியர்கள் மீது காண்பித்தனர்.

17 ஆயிரம் பேர் பலி
இதனால் காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் உள்ள சீக்கியர்களை குறிவைத்து தாக்க தொடங்கினர். குறிப்பாக டெல்லியில் இதன் பாதிப்பு மிக அதிகமாக இருந்தது. மொத்தமாக நாடு முழுவதும் 3 ஆயிரத்து 350 பேர் கொல்லப்பட்டனர் என்று அரசு தெரிவித்தது. ஆனால் இறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 8 ஆயிரம் முதல் 17 ஆயிரம் வரை இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இருண்ட ஆண்டாக 1984
இந்த நிலையில், 'நவீன இந்திய வரலாற்றில் சீக்கியர்களுக்கு எதிராக கடந்த 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரம் தான் இந்தியாவின் இருண்ட ஆண்டுகளில் ஒன்று' என அமெரிக்க செனட் சபை உறுப்பினர் பட் டூமி தெரிவித்தார். அமெரிக்க செனட் வளாகத்தில் செனட் சபை உறுப்பினர் பட் டூமி சீக்கிய கலவரம் குறித்த சோகங்ளை அனுசரிக்கும் விதமாக இவ்வாறு பேசினர். அப்போது மேலும் அவர் பேசியதாவது:- நவீன இந்தியாவின் இருண்ட ஆண்டாக 1984- ஆம் ஆண்டு அமைந்தது.

மனித உரிமை மீறல்களை தடுக்க
இந்தியாவில் இனக்குழுக்கள் இடையே பல வன்முறை சம்பவங்களை உலகம் பார்த்தது. குறிப்பாக சீக்கிய சமூகத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடைபெற்றது. நவம்பர் 1, 1984-ஆம் ஆண்டு ஏற்பட்ட இந்த சோகத்தை நினைவு கூர நாம் இங்கு கூடியிருக்கின்றோம். எதிர்காலங்களில் இது போன்ற மனித உரிமை மீறல்களை தடுக்க நாம் கடந்த கால சீர்திருத்தங்களை அங்கீகரிக்க வேண்டும்.

மிகப்பெரிய சமூகம்
சீக்கியர்களுக்கு எதிரான இந்த கொடுமைகளை நாம் கண்டிப்பாக நினைவு கூர வேண்டும் . அப்போதுதான் இந்த துயர சம்பவத்திற்கு பொறுப்பை உணர வைக்க முடியும்'' என்றார். அமெரிக்கா சீக்கிய பேரவையின் உறுப்பினராகவும் இருக்கும் பட் டூமி, உலகின் மிகப்பெரிய சமூகங்களில் சீக்கிய சமூகமும் ஒன்று எனவும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications