பாருங்க நம்ம மனுஷங்க பண்ண வேலைய.. செவ்வாய் கிரகத்தையும் குப்பையாக்கிட்டாங்க பாஸ்.. 7 ஆயிரம் கிலோவாம்
வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வசிக்கும் சூழல் உள்ளதா என்பவற்றை ஆராய்ச்சி செய்ய உலக நாடுகள் அந்த கிரகத்திற்கு விண்கலன்களை அனுப்பி வருவதால், தற்போது அந்த கிரகத்தில் சுமார் 7 ஆயிரம் கிலோ அளவுக்கு குப்பைகள் சிதறி கிடப்பதாக உலக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பூமியை போல மனிதன் வசிக்க தகுதி உடைய வேறு கிரகங்கள் உள்ளனவா? என்ற ஆராய்ச்சி பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
இதற்காக வேற்று கிரகங்களை ஆய்வு செய்ய விண்கலன்கள் அனுப்பபடுகின்றன.

செவ்வாய் கிரகம்
அமெரிக்காவின் நாசா முதல் இந்தியாவின் இஸ்ரோ வரை பல்வேறு நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சி மையங்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளன. சூரிய குடும்பத்தில் பூமிக்கு மிக நெருக்கமாக உள்ள செவ்வாய் கிரகத்தில் மனிதன் வசிக்க முடியுமா? என்ற ஆய்வில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்காக விண்கலன்களும் ரோவர்களும் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.

2030-ஆம் ஆண்டில்
சுமார் 50 ஆண்டுகளாக இந்த ஆய்வு நடைபெற்று வருகிறது. வரும் 2030-ஆம் ஆண்டில் செவ்வாய் கிரகத்திற்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்துவதில் நாசா மும்முரம் காட்டி வருகிறது. செவ்வாய் கிரகத்தில் மனிதன் காலடி எடுத்து வைப்பதற்கு இன்னும் பல தொலைவுகளை நாம் கடக்க வேண்டியிருந்தாலும் விஞ்ஞானிகள் இதற்காக முழு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். செவ்வாய் கிரகத்தில் மனிதன் காலடி எடுத்து வைத்தால் மனித சமூகத்தில் அது மற்றொரு பெரிய மைல் கல்லாக அமையும்.

தீவிரம் காட்டும் உலக நாடுகள்
இதற்காக செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய தீவிரம் காட்டி வரும் உலக நாடுகள் அந்த கிரகத்திற்கு போட்டி போட்டு விண்கலத்தை அனுப்பி வருகின்றன. இந்தியா, ரஷியா, அமெரிக்கா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் உள்பட சில நாடுகள் மட்டுமே செவ்வாய் கிரகத்தில் சரியாக விண்கலத்தை அனுப்பியுள்ளன. பல விண்கலன்கள் செவ்வாய் கிரக விண்வெளியில் தான் சிதறிக் கிடக்கின்றன என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இடையூறாக அமையலாம்
அதன்படி, செவ்வாய்கிரத்திற்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்ட விண்கலன்களின் ஹார்டுவேர்ஸ் மற்றும் செயல்படாத விணகலன்கள் என சுமார் 7 ஆயிரம் கிலோ அளவுக்கு மேற்பரப்பில் சிதறி கிடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் சிதறி கிடக்கும் இந்த குப்பைகளால் வரும் காலத்தில் ஆய்வுக்காக அனுப்பப்படும் விண்கலன்களின் செயல்பாட்டுக்கு இடையூறாக அமையலாம்'' என்று அவர் தெரிவித்துள்ளார்.

14 வெவ்வேறு திட்டங்கள்
எது எப்படியோ பூமியை குப்பைகளாக ஆக்கியது மட்டும் அல்லாமல் செவ்வாய் கிரகத்தை குப்பையாக்க தொடங்கி விட்டார்களே.. என்று பலரும் விவாதிக்காத குறைதான். செவ்வாய்க்கு இதுவரை 14 வெவ்வேறு திட்டங்கள் மூலம் 18 விண்கலங்களை பல்வேறு நாடுகளும் அனுப்பியிருக்கின்றன. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் விண்கலன்களின் குப்பைகள் கிடப்பதாக தகவல் வெளியாவது இது முதல் முறை கிடையாது. ஏற்கனவே பலமுறை இதுபற்றிய தகவல்கள் வந்திருக்கின்றன.












Click it and Unblock the Notifications