'ஊசி' வேண்டாம்... மாத்திரை போதும்... கொரோனா குணப்படுத்த வரும்... அமெரிக்காவின் புதிய மருந்து
வாஷிங்டன்: கொரோனா நோயாளிக்கு ஊசிகள் மூலம் இல்லாமல், மோல்னுபிராவிர் என்ற மாத்திரையை அளிப்பதன் மூலம் மட்டுமே வைரசின் தீவிர தன்மையைக் குறைக்க முடிவதாக அந்நிறுவன ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனாவின் கோரப் பிடி உலகின் எந்த நாடுகளையும் விட்டு வைக்கவில்லை. உருமாறிய கொரோனா, முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றாதது, உள்ளிட்ட காரணங்களால் வைரஸ் பரவல் பல மடங்கு அதிகரித்துள்ளது.
இப்போது தடுப்பூசிகள் மட்டுமே கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த ஒரே நம்பிக்கையாகப் பார்க்கப்படுகிறது. இருந்தாலும்கூட உலக நாடுகளில் தற்போது ஏற்பட்டுள்ள தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு கொரோனா தடுப்பூசியின் உற்பத்தி இல்லை.
கொரோனா சிகிச்சை
தடுப்பூசியைச் செலுத்த ஊசி, சிரஞ்ச் போன்றவையும் அதிகமாகத் தேவைப்படுவதால் மருத்து கழிவுகளும் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. கொரோனா பரவ தொடங்கி ஓர் ஆண்டு முடிந்துள்ள போதிலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்க வெறு சில ஆப்ஷன்கள் மட்டுமே மருத்துவர்களுக்கு உள்ளது.
ரெமிடிசிவர்
அதிலும்கூட ரெமிடிசிவர் என்ற மருந்து மட்டுமே கொரோனா காரணமாக மோசமாகப் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு நல்ல பலன் அளிக்கிறது. கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு ரெமிடிசிவர் அளிக்கப்படுகிறது. இதன் மூலம் அவர்களின் நோய் தொற்றின் தீவிரமின்மையைக் குறைக்க முடிவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க நிறுவனம்
இந்நிலையில், கொரோனா காரணமாகப் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் மருந்து பலன் அளிப்பதாக அமெரிக்காவைச் சேர்ந்த ரிட்ஜ்பேக் பயோ தெரபியூடிக்ஸ் எல்பி(Ridgeback Biotherapeutics LP) என்ற மருந்து நிறுவனம் அறிவித்துள்ளது. மோல்னுபிராவிர்(molnupiravir) எனப்படும் இந்த மருந்தைத் தொடர்ச்சியாக ஐந்து நாட்களுக்கு அளிப்பதன் மூலம் கொரோனா பாதிப்பின் தீவிரமின்மையைக் குறைக்க முடிவதாக அந்நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மாத்திரை மட்டுமே
இதில் முக்கிய விஷயம் என்னவென்றால், ரெமிடிசிவர் உள்ளிட்ட மற்ற மருந்துகளைப் போல இதை ஊசி மூலம் செலுத்தத் தேவையில்லை. மோல்னுபிராவிர் என்பது மாத்திரையாகும். இந்த மாத்திரை குறித்த அடுத்தகட்ட ஆராய்ச்சிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த மாத்திரை கொரோனா வைரசின் தீவிர தன்மையை குறைப்பது மட்டும் உறுதியானால், கொரோனா சிகிச்சையில் இது பெரும் புரட்சியை ஏற்படுத்தும்.
பெரும் புரட்சி
கொரோனாவால் பாதிக்கப்படுவார்களில் ஒருசாரர் மட்டுமே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகிறார்கள். மருத்துவமனைகளில் போதிய படுக்கைகள் இல்லாதது உள்ளிட்ட பல காரணங்களால் குறிப்பிட்ட சதவீத மக்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்கின்றனர். அப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்பவர்களுக்கு இந்த மருந்து மிக முக்கியமானதாக இருக்கும்.