"டேன்ஞர்!" ரொக்க பணம் vs கிரெடிட் கார்டு.. கொரோனா அதிக காலம் இருப்பது எதில் தெரியுமா! ஷாக் முடிவுகள்
வாஷிங்டன்: கொரோனா வைரஸ் அடுத்த அலை ஏற்படலாம் என்ற அச்சம் மக்களிடையே அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பரவல் குறித்து முக்கிய ஆய்வு முடிவு ஒன்று வெளியாகி உள்ளது.
கொரோனா வைரசை நாம் உலகில் இருந்து இன்னும் முழுமையாக அழிக்கவில்லை. கொரோனா தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால் அதை அழிப்பதில் பெரும் சவால் ஏற்பட்டுள்ளது.
உலகின் பல நாடுகளில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் தொடர்ந்து குறைந்து வந்தது. இதனிடையே சில நாடுகளில் கொரோனா பரவல் மெல்ல அதிகரிக்கத் தொடங்குவது கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது.
கொரோனா இன்னும் ஓயவில்லை! 4வது அலையில் மாட்டிக் கொள்ளக் கூடாது! மக்களை எச்சரிக்கும் ராதாகிருஷ்ணன்..!
ஆய்வு
இதன் காரணமாக கொரோனா எப்படிப் பரவுகிறது என்பது குறித்தும் ஆய்வுகள் உலகெங்கும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முதலில் டாலர், ரூபாய் போன்ற நோட்டுகள் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதாகக் கூறப்பட்டது. கொரோனா பரவ தொடங்கிய சமயத்தில் நோட்டுகளின் புழக்கமும் கணிசமாகக் குறைந்தது. பொதுமக்கள் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்ற பிளாஸ்டிக் பண அட்டைகள் பக்கம் நகர்ந்தனர்.
ரொக்கம் vs கார்டுகள்
அதேபோல பல தொழில் நிறுவனங்களும் கூட ரொக்கப் பணம் முறையை நிறுத்திவிட்டன. உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட எந்தவொரு மருத்துவ அமைப்பும் ரொக்க பணம் காரணமாக கொரோனா பரவுகிறது எனக் கூறவில்லை. இருப்பினும், மக்களிடையே ரொக்கம் மூலம் கொரோனா வைரஸ் பரவுகிறது என்ற எண்ணம் நன்கு பதித்துவிட்டது. இந்நிலையில், இதற்கு நேர்மாறான ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.
கட்டுப்படுத்த முடியாது
அதில் கொரோனா வைரசிற்குக் காகித பணத்தில் வளரும் திறன் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. அதேநேரம் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்ற பிளாஸ்டிக் பண அட்டைகளில் வைரஸ் அதிக காலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வைரஸ் முதலில் பரவிய பின்னர், சுமார் 48 மணி நேரம் வரை பண அட்டைகளில் கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, ரொக்க பணத்திற்குப் பதிலாகப் பண அட்டைகளைப் பயன்படுத்துவதன் மூலம் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியாது என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
ரொக்கத்தில் எவ்வளவு
இந்த ஆய்வில் ரொக்க பணம் மற்றும் பண அட்டைகளில் இருக்கும் கொரோனா வைரஸ் குறித்து 30 நிமிடங்கள், 4 மணிநேரம், 24 மணிநேரம் மற்றும் 48 மணிநேரம் கால இடைவெளியில் சோதனை செய்யப்பட்டது. அதில் நாணயங்களில் வெறும் 30 நிமிடங்களில் கொரோனா 99.9993 சதவீகிதம்அழிந்துவிடுவது கண்டறியப்பட்டுள்ளது. அடுத்து 24 மற்றும் 48 மணி நேரத்தில் சோதனை செய்தபோது, ரூபாய் நோட்டுகளில் வைரஸ் எதுவும் கண்டறியப்படவில்லை.
கார்டுகளில் எவ்வளவு
இதற்கு நேர்மாறாக, கொரோனா வைரசானது பண அட்டைகளில் 30 நிமிடத்தில் 90 சதவீதம் மட்டுமே அழிகிறது. அடுத்து 4 மணிநேரத்தில் 99.6 சதவீதமாகவும், 24 மணிநேரத்தில் 99.96 சதவீதமாகவும் உள்ளது. அதேபோல 48 மணி நேரத்திற்கு பிறகும் பண அட்டைகளில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. நாணயங்களிலும் பிளாஸ்டிக் அட்டைகளை போலவே கொரோனா வைரஸ் அதிக காலம் இருந்தது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.